Tuesday, June 15, 2010

நித்யானந்தா ஆபாச சிடி வெளியானது எப்படி ? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.





பொதுவாக, தமிழ்நாட்டுக்கென ஒரு ‘ட்ரென்ட்’ உண்டு. அது பத்திரிக்கையாளர்கள் மீதான புகார்களைப் பற்றி மூச்சு விடாதது. பத்திரிக்கையாளர்களைப் பற்றி வண்டி வண்டியாக புகார்கள் இருந்தாலும், அதைப் பற்றி எந்த பத்திரிக்கையும் எழுதாதாம். அதுதான் பத்திரிக்கை தர்மமாம். இந்த தர்மத்தை மூத்த பத்திரிக்கையாளர்களும் கடை பிடிப்பது, தமிழகத்தின் சாபக்கேடு.

ஊரில் உள்ள ஊழல்களையெல்லாம் எழுதுவார்களாம். ஆனால், அதை விட முடை நாற்றமெடுக்கும் இவர்களின் ஊழலைப் பற்றி யாரும் எழுதக் கூடாதாம். ஆனால், இது சவுக்கு அய்யா. சவுக்கு. சவுக்குக்கு இந்த பத்திரிக்கை தர்மமெல்லாம் பொருந்தாது. ஊழல் செய்தவர்கள் யாராயிருந்தாலும், அவர்களின் முகத்திரையை கிழிப்பதே சவுக்கின் வேலை.

சுவாமி நித்யானந்தா… …. தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும், அனைவராலும் உச்சரிக்கப் பட்ட ஒரு பெயர். தமிழ்நாட்டில் அனைத்துப் பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளி ஏறக்குறைய ஒரு மாத காலத்துக்கும் மேலாக தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பெயர். இந்த பிரச்சினையில் நுழையும் முன், இந்தியாவின் ஆன்மீக வியாபாரத்தை புரிந்து கொள்வது அவசியம்.

இந்தியாவில் எப்போதுமே, ஆன்மீக வியாபாரத்துக்கு நல்ல மதிப்பு இருந்தே வந்திருக்கிறது. 99 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருந்ததன் மூலம், ஓஷோ, இந்தியாவின் ஆன்மீக வியாபாரத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.





ஓஷோவின் கணக்கிலடங்காத சொத்துக்கள், இது எவ்வளவு பணம் புழங்கும் வியாபாரம் என்பதை உலகுக்கு உணர்த்தியது.

இவர் அளவுக்கு சம்பாதிக்க வில்லை என்றாலும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் “கிருஷ்ணமூர்த்தி பவுன்டேஷனும்“ பணம் புரளும் ஒரு ட்ரஸ்ட்தான்.



இவர்கள் இருவரின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப வந்தவர்கள் மூவர்.

ஒருவர் ஜக்கி வாசுதேவ். அடுத்தவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.






அடுத்தவர், இன்று கழன்ற டவுசரோடு (Caught with pants down) மாட்டிக் கொண்ட நித்யானந்தா.

இந்தியாவின் ஆன்மீக வியாபாரத்தை பங்கு போட்டுக் கொள்வதில் இந்த மூவருக்கும் தான் கடும் போட்டி. இவர்கள் மூவரைத் தவிர, மேல்மருவத்தூர் சாமியார் போன்றவர்கள் அல்லு சில்லுகள். இந்த மூவரைப் போல, வெளிநாட்டு பணத்தை வாங்கி பெரும் பணக்காரனாகும் வியாபார நுணுக்கம் தெரியாதவர்கள்.

இந்த மூவரும், தங்கள் வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ள பகீரதப் பிரயத்தனங்களை செய்ய ஆரம்பித்தார்கள். ஒருவர் ஆனந்த விகடனில் தொடர் எழுதுவார். இன்னொருவர் குமுதத்தில் தொடர் எழுதுவார். ரவிசங்கர், இந்தியா டுடேவின் அட்டைப் படத்தில் வருவார்.

இது போக மின்னணு ஊடகங்களிலும் இடம் பிடிப்பதில் இவர்கள் மூவருக்கும் இடையே கடும போட்டி.

இந்த நிலையில் தான், நக்கீரன் பத்திரிக்கையில் 1993 94 ஆண்டுகளில் ஜக்கி வாசுதேவின் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியிடுகிறது. இந்த செய்தியை எழுதியவர் மகரன் என்ற நிருபர்.

இதற்கு அடுத்து அதே ஆண்டுகளில் நக்கீரன் ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில் கஞ்சா சரளமாக புழங்குகிறது என்று ஒரு செய்தி வருகிறது. இதையும் மகரன் என்ற நிருபரே எழுதுகிறார்.

1994-95ம் ஆண்டுகளில் ஜக்கி வாசுதேவின், மாஹே மற்றும் ஏணம் பகுதிகளில் உள்ள ஆசிரமங்களில் பெண் விவகாரங்களில் கலாச்சார சீரழிவு என்று மீண்டும் செய்தி வருகிறது.
இந்நிலையில், ஜக்கி வாசுதேவ், 1996-97ம் ஆண்டுகளில் நக்கீரன் காமராஜை அழைக்கிறார்.

அப்போது கோவை சென்று ஜக்கியை சந்திக்கும் காமராஜ், அந்த ஆசிரமத்திலேயே ஒரு மாதம் தங்குகிறார். இந்த கால கட்டத்தில், ஜக்கியின் தேனொழுகும் பேச்சில் மயங்கிய காமராஜ், ஜக்கியின் பரம சீடனாக உருவெடுக்கிறார். ஜக்கிக்காக தமிழ்நாட்டில் பல காரியங்களை செய்து கொடுக்கும் பரம பக்தனாக காமராஜ் மாறுகிறார்.



இதையடுத்து, ஜக்கியின் ஆசிரமத்துக்காக சொத்தக்களை வாங்கிக் குவிப்பதிலும், இது தொடர்பாக அரசு அலுவலகங்களில் வேலைகளை சுலபமாக்குவதிலும், காமராஜ் பெரும் பங்கு வகிக்கிறார்.

ஜக்கியை அழைத்து வந்து, சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் உள்ளே கருணாநிதி தலைமையில் மரம் நடும் விழா நடத்தப் பட்டது அல்லவா. அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்ததே காமராஜ் தான்.



தன்னுடைய குருவான ஜக்கி வாசுதேவை கருணாநிதிக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற முயற்சியை நிறைவேற்ற கருணாநிதியிடம் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தியே இந்த ஏற்பாடுகளை செய்தார்.



காமராஜின் மகன், கோவையில் உள்ள ஜக்கி வாசுதேவின் உறைவிடப் பள்ளியில் படித்து வருகிறான் என்பதும் குறிப்பிடத் தகுந்த தகவல்.

இந்த மூன்று சாமியார்களுக்குள் ஏற்கனவே இருந்த தொழில் போட்டியை தன்னுடைய போட்டியாக காமராஜ் கருதத் தொடங்கினார். இதையொட்டியே, காமராஜுக்கு, நித்யானந்தாவின் சீடர், லெனின் என்கிற தர்மானந்தாவின் பழக்கம் ஏற்படுகிறது. இந்த தர்மானந்தா, நித்யானந்தாவின் பெண் தொடர்புகள் பற்றி காமராஜிடம் கூறுகிறார். இருவரும் சேர்ந்து ஒரு பெரிய சதித் திட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

நித்யானந்தாவை சிக்கலில் மாட்டுவது போன்ற ஒரு வீடியோ படத்தை தயாரிக்கத் திட்டமிடுகின்றனர். லெனினுக்கு தொழில்நுட்பம் பற்றிய விபரங்கள் ஏதும் தெரியாது என்பதால், இதற்கான வீடியோ கேமரா மற்றும் இதர உபகரணங்களையும் காமராஜே வாங்கிக் கொடுக்கிறார். திட்டமிட்டபடி வீடியோ உபகரணம் உரிய இடத்தில் பொருத்தப் படுகிறது என்று ஆசிரம வட்டாரங்கள் கூறுகின்றன.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல, நித்யானந்தாவோடு, நடிகை நெருக்கமாக இருக்கும் காட்சி பதிவாகிறது. இதைப் பார்த்த, காமராஜுக்கும், லெனினுக்கும் சாமியாரை மிரட்டி பணம் பறிக்கலாம் என்ற எண்ணம் வருகிறது.



இதையடுத்து, லெனினையே, நித்யானந்தாவோடு பேரம் பேச அனுப்புகிறார் காமராஜ். இவர்களின் பேரம் பல கோடி ரூபாய்களைக் கேட்கிறார்கள்.

நித்யானந்தாவோடு பேரம் தொடங்கியதும், நித்யானந்தா இந்த விவகாரத்தைப் பற்றி, சேலத்தில் உள்ள ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியிடம் ஆலோசனை கேட்கிறார். அந்த அதிகாரி, இது போல பணம் கொடுத்தால், இந்த ப்ளாக் மெயில் தொடரும் என்பதால், பணம் கொடுக்க மாட்டேன் என்று மறுக்க சொல்கிறார். அதன் படியே நித்யானந்தா பணம் கொடுக்க மறுக்க, இந்த வீடியோவை வெளியிடுவது என்று லெனினும் காமராஜும் முடிவெடுக்கின்றனர்.

அச்சு ஊடகங்களில் வந்தால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று காட்சி ஊடகங்களிலும் வர வேண்டும் என்று முடிவெடுக்கப் பட, காமராஜ் சன் டிவியுடன் பேரம் பேசி, இந்த வீடியோவுக்கான பிரத்யேக ஒளிபரப்பு உரிமைகளைத் தர, ஒரு தொகையை பெற்றுக் கொள்கிறார்.



இது போல வீடியோ ஒளிபரப்பப் படுகிறது என்ற தகவல் அறிந்த ஒரு மூத்த பத்திரிக்கையாளர் சன் டிவியின் செய்தி ஆசிரியரை தொடர்பு கொண்டு வீடியோ நகல் ஒன்று வேண்டும் என்று கேட்க, மொத்த கன்ட்ரோலும் நக்கீரனிடம் உள்ளது என்றும் எந்த நகலையும் யாருக்கும் தர உரிமை இல்லை என்று பதில் அளித்தது குறிப்பிடத் தக்கது.


இந்த வீடியோவை வெளியிட்டதால் நக்கீரன் உட்பட அனைவருக்கும் லாபம் தான். இது தொடர்பான செய்தி முதலில் வெளி வரும் நேரத்தில் நக்கீரனின் சர்குலேஷன் எவ்வளவு தெரியுமா ? வெறும் 60,000. இந்த நேரத்தில் வாரம் இருமுறை இதழாக இருக்கும் நக்கீரனை மீண்டும் வார இதழாக மாற்றலாமா என்ற ஆலோசனை நடக்கும் அளவுக்கு நிலைமை பரிதாபமாக இருந்தது. நித்யானந்தா கதைக்குப் பிறகு, நக்கீரனின் சர்குலேஷன் 1.5 லட்சத்தை தொட்டிருக்கிறது.



இந்த செய்தியை முதன் முதலில் வெளியிட்டு, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக, நக்கீரன் கவர் ஸ்டோரியாக, நித்யானந்தாவுக்கு சுய இன்பப் பழக்கம் உண்டு, நித்யானந்தா நீலப்படம் பார்ப்பார் என்று இந்தக் கதைகளையே வெளியிட்டு, சரோஜா தேவி கதைகளை மீண்டும், தமிழுக்கு கொண்டு வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. நித்யானந்தா நக்கீரனை காப்பாற்றினார் என்றால் அது மிகையாகாது.


சென்னை காவல் துறையிடம் புகார் ஒன்னை கொடுத்த லெனின் என்கிற தர்மானந்தாவை எந்த பத்திரிக்கையாளரையும் சந்திக்க அனுமதி வழங்கப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.


சென்னை மாநகர காவல்துறை இந்த விவகாரத்தை கையாண்ட விதம் ஒரு பெரிய தமாசு. முதலில் நாலு வழக்கறிஞர்கள் சென்று கமிஷனரிடம் புகார் கொடுக்கிறார்கள். உடனே நித்யானந்தா மேல் வழக்கு பதிவு செய்கிறார் கமிஷனர்.

இந்த ஆபாச வீடியோவை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி குழந்தைகளோடு டிவி பார்க்க விடாமல் நெருக்கடிக்கு உள்ளாக்கிய சன் டிவி மீதும், வாரமிருமுறை இதழாக சட்ட விரோதமாக விற்கப் படும் “போர்னோ“ பத்திரிக்கையான நக்கீரன் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பதிவுத் தபாலில், கல்யாணி என்ற வழக்கறிஞர் அனுப்பிய புகார் ஏன் கமிஷனர் ராஜேந்திரன் கண்ணுக்குத் தெரியவில்லை ?


ஏனென்றால், இது அத்தனையையும் ஆட்டி வைப்பது காமராஜ். அவர் சொன்னால் வழக்கு பதியப் படும். வேண்டாம் என்றால் மூடப்படும். முதலில் வழக்கு பதிவு செய்த சென்னை காவல்துறை, உடனடியாக வழக்கை பெங்களூருக்கு மாற்றம் செய்ததும் குறிப்பிடத் தக்கது. நித்யானந்தா கைது செய்யப் பட்டதும், ஒரு தனிப்படை பெங்களுர் சென்று நித்யானந்தாவை விசாரிக்கும் என்று கமிஷனர் ராஜேந்திரன் சொன்னது இன்னொரு தமாஷ்.


ஏற்கனவே மாற்றம் செய்யப் பட்ட வழக்கு தொடர்பாக எப்படி விசாரிக்க முடியும் ?

இந்த சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டை, நித்யானந்தா விவகாரத்தோடு முடிச்சு போட்டு கவர் ஸ்டோரி வெளியிட்டது.
பெரிய வியாபாரிகள் மூன்று பேரில் ஒருவரை ஒழித்துக் கட்டியாகி விட்டது. இன்னும் ஜக்கிக்கு போட்டியாக ஒருவன் இருக்கிறானல்லவா ?



அவனையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த கவர் ஸ்டோரி. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமே, அந்த துப்பாக்கிச் சூடு, ரவிசங்கரை குறி வைத்து நடத்தப் பட்டதல்ல என்று பேட்டியளித்த பின்பும் கூட இந்த சம்பவங்கள் இரண்டையும் முடிச்சு போட்டு கவர் ஸ்டோரி வெளியிடப் படுகிறது என்றால் ஜக்கியை தூக்கிப் பிடிக்க காமராஜ் எடுக்கும் முயற்சியை பாருங்கள்.

இந்தியாவின் ஒரே ஆன்மீக வியாபாரியாக ஜக்கி வாசுதேவை, ஒரு Monopoly வியாபாரி ஆக்கிவிட்டார் காமராஜ் என்றால், அது மிகையாகாது.


எல்லாம் ஆன்மீகம் அய்யா ஆன்மீகம்.


சவுக்கு

Sunday, June 13, 2010

சவுக்கின் செம்மொழி விருதுகள்.


செம்மொழி மாநாட்டுக்காக கருணாநிதி குடும்பத்தை விட, அரசு இயந்திரமும், பரந்து பட்ட சமூகமும் கொடுத்திருக்கக் கூடிய உழைப்பு மெய் சிலிர்க்கச் செய்கிறது.

அரசு அதிகாரிகளும், பத்திரிக்கையாளர்களும், தமிழறிஞர்களும், காட்டும் ஆர்வமும், உணர்வும் பிரமிப்பூட்டுகின்றன.


இவர்களின் இந்த உழைப்பு இந்த கருணாநிதி குடும்ப மாநாட்டில் சரி வர கவுரவிக்கப் படாமல் போகப் போகிறதே என்ற அச்சமும் கவலையும் சவுக்குக்கு உண்டு.

அதனால், இந்தச் செம்மொழி மாநாட்டை ஒட்டி உழைத்தவர்கள், ஓடாகத் தேய்ந்தவர்கள் அனைவருக்கும் “செம்மொழி சொம்பு“ என்ற விருதை சவுக்கு வழங்குகிறது.



இந்த விருதுக்கு திமுகவைச் சேர்ந்தவர்களோ, கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ, தகுதி பெற மாட்டார்கள். இந்த விருதுக்காக பரிந்துரைப்பவர்களின் பட்டியல் மட்டும் இப்போது வெளியிடப் படுகிறது.

இந்த விருதைப் பெறப்போகிறவர்கள் யார் என்பதை வாசகர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.


சவுக்கின் வாசகர்கள் மேல் சவுக்குக்கு எப்போதுமே தீராத காதலும் நம்பிக்கையும் உண்டு. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் விருதுக்கான முதல் மூன்று இடங்களை வாசகர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

ரகசியமாக சவுக்கின் ஐபி அட்ரஸை கண்காணிக்கும் உளவுத் துறையினருக்கு இதில் வாக்களிக்கும் உரிமை இல்லை.

முதல் பரிந்துரை




மாவீரன் ராஜபக்ஷே. இவர் ஏன் முதல் பரிந்துரையாக வருகிறார் என்றால் ஒரு ஆண்டுக்கு முன்பே சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன், தமிழர்களை ஒடுக்கி, கொன்று கருணாநிதியின் மனதை குளிரச் செய்ததால்.

இப்போது, இலங்கையில் போர் உக்கிரமாக நடப்பதாக நினைத்துப் பாருங்களேன். செம்மொழி மாநாடு நடத்தாமல் இந்நேரம் கருணாநிதி கடிதம் எழுதிக் கொண்டிருக்க வேண்டும், காஞ்சி ஜெயேந்திரரைப் போல, கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி நடத்துபவர்களை ஆசிர்வதிக்க வேண்டும், இரண்டு மணி நேரம் உண்ணா விரதம் இருக்க வேண்டும், ஒரு அடிமை இன்னொரு அடிமையிடம் என்ன கேட்க முடியும் என்று அறிக்கை வெளியிட வேண்டும்.

இந்த வேலைகளேல்லாம் இல்லாமல் கச்சிதமாக ஒரு வருடத்திற்கு முன்பே காரியத்தை முடித்ததால், இவர்தான் முதல் பரிந்துரை.

இரண்டாவது பரிந்துரை




தினமணி ஆசிரியர் வைத்தியநாதன். தனது தேர்ந்த எழுத்துக்கும், வளையான நேர்மைக்கும் சொந்தக் காரர் தான் இந்த வைத்தியநாதன்.

தினமணியின் கேப்ஷனாக நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்று போட்டிருக்கிறதே, அது இவருக்கு நன்றாகவே பொருந்தும்.

அப்படிப் பட்டவர் கருணாநிதிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். இவரின் தலையங்கங்களைப் படித்து கருணாநிதி இவரை திட்டாத கெட்ட வார்த்தைகளே இல்லை.

ஆனால், இவ்வாறு கருணாநிதி இவரைத் திட்டினார் என்று சொல்லும் போது, அதற்கான பதிலாக ஒரு புன்னகையை மட்டுமே உதிர்ப்பார்.

பத்திரிக்கை தர்மம் என்றால் என்ன என்பதை உணர்ந்து சுவாசித்து வாழ்ந்து வருபவர்.

இப்படிப்பட்ட வைத்தியநாதன், ஒரு ஆறு மாதத்திற்கு முன்னால் இருந்து அந்தர் பல்டி அடிக்கத் தொடங்கினார். தினமணியின் ஒரு தலையங்கத்தின் தலைப்பு “முதல்வர் மனது வைத்தால்“ என்று மேலவை அமையுங்கள் என்று மன்றாடுகிறார்.

மேலவை அறிவிப்பு வெளியானவுடன், முதல்வருக்கு நன்றி தெரிவித்து அடுத்த தலையங்கம். செம்மொழி மாநாடு அறிவிப்பு வெளியானவுடன், மாநாட்டில் இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்ற கெஞ்சல் தலையங்கங்கள்.

மறுநாளே கருணாநிதி இதை ஏற்று அறிவிப்பு வெளியிட்டவுடன், அதற்கு நன்றி தெரிவித்து அடுத்த தலையங்கம். கருணாநிதியை நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறார்ப் போல கேள்வி கேட்டு கட்டுரை எழுதும் சிறந்த கட்டுரை ஆசிரியர் பழ.கருப்பையாவின் கட்டுரைகள், 10 நாட்களுக்கு ஒரு முறை தவறாமல் வரும்.

ஆனால், வைத்தியநாதனின் அந்தர் பல்டிக்கு பின்னால், பழ.கருப்பையா காணாமல் போய் விட்டார். வாசகர்களின் தொடர்ந்த தொந்தரவினால், சமீபத்தில் ஒன்றிரண்டு கட்டுரைகள் வந்தன.

இது மட்டுமல்லாமல் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு கவுன்ட் டவுன் போடுவது போல செம்மொழி மாநாட்டுக்கு இன்னும் 80 நாட்கள், 70 நாட்கள் என்று ஒரு தனி பத்தி. இதனால் அந்தர் பல்ட்டி அடித்த வைத்தியனாதன் இரண்டாவது பரிந்துரை.

மூன்றாவது பரிந்துரை




இந்தியன் எக்ஸ்பிரஸ் மெட்ரோ எடிட்டர் பாபு ஜெயக்குமார். ஆங்கிலப் பத்திரிக்கையின் மெட்ரோ எடிட்டராக இருந்தாலும், பாபு ஜெயக்குமாருக்கு இந்தச் செம்மொழி மாநாட்டில் இருக்கும் ஆர்வம் யாராலும் குறைத்து மதிப்பிட முடியாதது.

தமிழ்நாடு அரசியலில் தன்னை நிபுணராக நினைத்துக் கொள்ளும் பாபு ஜெயக்குமார் அரசுக்கோ, அரசு அதிகாரிகளுக்கோ எதிரான செய்திகள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் வெளியானால், கருணாநிதி மனது நோகும் என்று அத்தனை செய்திகளையும் வெளியிடாமல் தடுப்பவர்.

கருணாநிதி பிறந்த நாளுக்கு, மூன்று பக்கங்களை ஒதுக்கி கருணாநிதியின் புகழ் பாடுபவர்.

செம்மொழி மாநாடு என்று சொல்லிக் கொண்டே யாராவது சிறுநீர் கழித்தால் கூட “செம்மொழி சிறுநீர்“ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து, எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் பிரதானமாக வெளியிடுபவர்.

அதனால் இவர்தான் இவ்விருதுக்கான மூன்றாவது பரிந்துரை.


நான்காவது பரிந்துரை




தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி. இவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருப்பதே செம்மொழி மாநாட்டை நடத்துவதற்காகத் தான் என்பது போல இருக்கிறது இவர் செயல்பாடு.

இதற்காகத் தானே இவருக்கு பணி நீட்டிப்பு வேறு வழங்கப் பட்டிருக்கிறது. இவர் அலுவல் ரீதியான பணிகளை பார்ப்பதில் காட்டும் ஆர்வத்தை விட, கருணாநிதியின் குடும்ப நிகழ்ச்சியான செம்மொழி மாநாட்டு வேலைகளில் காட்டும் ஆர்வம் மிக மிக அதிகம்.

பெயர் என்னவோ ஸ்ரீபதி என்று இருந்தாலும், செம்மொழி மாநாட்டில் காட்டும் ஆர்வத்தை கணக்கில் கொள்ளும் போது, இவர் ஒரு தமிழாய்ந்த அறிஞர் என்றே அறியப் படுகிறார். எப்பொழுது பார்த்தாலும் ஒரு முழுக்கை சட்டை போட்டுக் கொண்டு, கருணாநிதியின் பின்னாலேயே அலையும் இவர்தான் செம்மொழி சொம்புக்கான நான்காவது பரிந்துரை.


ஐந்தாவது பரிந்துரை




ராதாகிருஷ்ண நாயுடு. இவர் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி. ஆனால் இவர் செம்மொழி மாநாட்டிற்கு ஆற்றிய பணிகள் மற்றவர்கள் அனைவரையும் விட அளப்பற்கரியது.

செங்கல்பட்டில் ஆ…. ஊன்னா உண்ணாவிரதம் இருக்கும், ஈழ அகதிகளை போலீசை விட்டு தடியடி நடத்தி ஒடுக்கிய லாவகம் என்ன, ஈழத் தமிழர்களுக்காக போராடிய வழக்கறிஞர்களை காவல்துறையை விட்டு அடித்த வேகம் என்ன, அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கருப்புக் கொடி காட்டிய வழக்கறிஞர்களை கண்மூடித்தனமாக தாக்கி விட்டு, வீடியோவில் அடித்தவர்கள் பதிவாகி இருந்தாலும், அவர்களை கைது செய்யாமல் அடிபட்டவர்கள் மீதே வழக்கு போட்டு சிறைக்கு தள்ளும் அழகு என்ன, நாயுடுன்னா நாயுடுதான்.

இப்போது இவரின் பேச்சு, மூச்சு, சிந்தனை, உணவு அனைத்துமே செம்மொழி மாநாடுதான் என்று இவர் அருகில் இருப்பவர்கள் சொல்கிறார்கள்.

“அய்யா எப்பவுமே செம்மொழி மாநாட்டு வேலையில பிசியா இருக்காங்க“ “அய்யாவுக்கு டைமே இல்ல“ “அய்யா மத்யானம் லன்ச் கூட சாப்ட்றதில்ல. சிஎம், அய்யாகிட்டதான் எல்லா வேலையையும் ஒப்படைச்சிருக்காங்க. இந்த சீப் செக்ரட்ரி எந்த வேலையையும் செய்றதில்லன்னு அய்யா வருத்தப் பட்றாரு“ என்று அங்கலாய்கின்றனர்.

நாயுடுவும், அவ்வப்போது கோயம்பத்தூர் சென்று மாநாட்டுக்கான பாதுகாப்பு வேலைகளைச் செய்வதும், பத்திரிக்கைகளுக்கு பேட்டி கொடுப்பதும் என்று பின்னி எடுக்கிறார். இதனால் ராதாகிருஷ்ண நாயுடுவே சவுக்கின் ஐந்தாவது பரிந்துரை.

ஆறாவது பரிந்துரை




இது மீண்டும் ஒரு பத்திரிக்கையாளர். இவர் பெயர் காமராஜ். பாப்புலராக நக்கீரன் காமராஜ் என்று அழைக்கப் படுவார்.

இவர் செய்யும் அளப்பரிய பணியானது சொல்லி மாளாது. கருணாநிதியின் கண்களும் காதுகளும் என்று இவரை சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டில், விலைவாசி விண்ணை முட்ட, அன்றாட வாழ்வை எப்படி நடத்துவது என்று மக்கள் விழி பிதுங்கிக் கொண்டிருக்க, காவல் துறையால் கடும் நெருக்கடிக்கு சாதாரண மக்கள் கூட ஆளாகிக் கொண்டிருக்க, தமிழ்நாடு ஏதோ அமைதிப் பூங்காவாக இருப்பது போலவும், மாதம் மும்மாரி பெய்து மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்து,

என்ன செய்வதென்று தெரியாமல், பாலியல் கதைகளை படிக்கும் சூழலில் இருப்பது போலவும் நக்கீரனில், கவர் ஸ்டோரிகளாக தொடர்ந்து இவன் அவள் கூட படுத்துக் கொண்டான், அவள் இவன் கூட படுத்துக் கொண்டான், இவன் இவள்களோடு படுத்துக் கொண்டான், எப்படி படுத்துக் கொண்டார்கள், எவ்வளவு நேரம் படுத்துக் கொண்டார்கள், படுத்துக் கொள்கையில் அவர்களுக்கு ஏற்பட்ட உணர்வு என்ன, என்பது போன்ற தத்ரூபமான பாலியல் கதைகளை வெளியிட்டு,

செம்மொழி மாநாட்டுக்கான சீரான பாதையை ஏற்படுத்திக் கொடுத்திருப்பது, இவரின் பலம்.

ஏழாவது பரிந்துரை




இவர் ஒரு பத்திரிக்கையாளர். பெயர் என்.ராம். இவரை இந்து ராம் என்று அழைப்பார்கள். ஏற்கனவே ஒரு முறை கருணாநிதி இந்து என்றால் திருடன் என்று பொருள் என்று சொன்னவுடன், பெரும் பிரச்சினையானது.

அதனால் இவரை இந்து ராம் என்று அழைத்தால், இந்துக்களை இழிவு படுத்துவதாகிவிடும் என்பதால் இவரை என்.ராம் என்றே அழைப்போம். புதிய சட்டமன்ற வளாகம் கட்டும் பணியை மேற்பார்வையிடும்போதும் சரி, கட்டி முடித்ததும் கட்டிட தொழிலாளர்களுக்கு பிரியாணி விருந்து கொடுக்கும் போதும் சரி,

அவர்கள் ஹிந்தி பாடல்களுக்கு நடனமாடும் போது, உங்களுக்கு ஹிந்தி பாடல்கள் பிடிக்குமா என்று கருணாநிதியை கேட்டு, அதை பெரிய அளவில் இந்து பத்திரிக்கைகளில் செய்தியாக வெளியிடுவதும் சரி, இந்த என் ராமின் பங்கு அளப்பறியது.

இந்து பத்திரிக்கையில் நாள்தோறும், செம்மொழி மாநாட்டு அரங்கில் பத்து எறும்புகள் வருகை தந்திருக்கின்றன, மாநாட்டு அரங்கை ஈக்கள் மொய்க்கின்றன, மாநாட்டு பந்தலை நாய்கள் நக்குகின்றன என்று செய்தி வெளியிட்டு, தமிழுக்கும் செம்மொழி மாநாட்டுக்கும் இவர் புரியும் சேவை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. அதனால் இவர் சவுக்கின்
ஏழாவது பரிந்துரை.



எட்டாவது பரிந்துரை




லத்திக்கா சரண். காவல்துறையில் ஒரு “டம்மி பீஸு“ வேண்டும் என்று, இவரை சீனியரையெல்லாம் ஓரங்கட்டி விட்டு டிஜிபியாக ஆக்கினாலும், இவரும் தன் பங்குக்கு, செம்மொழி மாநாட்டுக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியே வருகிறார்.

டிஜிபியாக பதவி ஏற்ற ஓரிரு நாட்களில் செங்கல்பட்டில் அகதிகள் முகாமில் மிருகத்தனமாக தடியடி நடந்தது. அன்றே இவர் தடியடியே நடக்கவில்லை, உள்நோக்கத்தோடு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்று அரசியல்வாதி போல அறிக்கை வெளியிட்டார்.

என்னதான் இருந்தாலும் நான்தான் டிஜிபி என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்று அவ்வப் போது, கோயம்பத்தூர் சென்று, செம்மொழி மாநாட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிப்பது போல பாவ்லா காட்டுவதன் மூலம், இவரும் இந்த விருதுக்கு தகுதி பெறுகிறார்.

சீனியரை ஓரங்கட்டி விட்டு, தனக்கு ப்ரமோஷன் கொடுத்தற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக கருணாநிதிக்கு சொம்படிப்பதன் மூலம், இவர் நாமினேஷன் சிறப்பு வாய்ந்தது.

இது தவிர, டிஜிபி பதவியை இழந்த ஆர்.நட்ராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இவ்வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் டிவிஷன் பென்ச், நாங்கள் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்று தெரிவிக்கும் அளவுக்கு “உள்குத்து அரசியல்“ செய்தததால், இவர் பொருத்தமானவர் தான்.

ஒன்பதாவது பரிந்துரை




தொல்.திருமாவளவன். ராஜபக்ஷேவை ஒழிப்பேன். பிரபாகரனை காப்பேன். காங்கிரஸ் கட்சிதான் என் முதல் எதிரி என்று ஊர் முழுக்க முழக்கம் செய்து விட்டு, காலை நக்கும் பொமரெனியன் நாய்க்குட்டி போல, கருணாநிதியை சுற்றி வருபவர்.

இலங்கை பிரச்சினையில் தமிழ் மக்கள் கருணாநிதி மீது கோபமடையும் போதெல்லாம் ஒரு போராட்டம் நடத்தி, கருணாநிதி மீதான கோபத்தை தணியச் செய்பவர்.

தன் குடும்பத்துக்கு மந்திரி பதவி வேண்டும் என்று தள்ளு வண்டியில் டெல்லி பயணம் செய்யத் தெரிந்த கருணாநிதிக்கு, தனக்கு ஒரு இணையமைச்சர் பதவி கூட பெற்றுத் தர முயலவில்லையே என்று மான ரோஷமெல்லாம் இல்லாமல், திருவல்லிக்கேணி திமுக வட்டச் செயலாளரை விட, நான்தான் நன்றாக சொம்படிப்பேன் என்று சொல்லாமல் செய்தும் காட்டுபவர்.

இலங்கைக்கு போய் ராஜபக்ஷேவை சந்திப்பாராம், ஆனால் ராஜபக்ஷே இந்தியா வந்தால் சந்திக்க மாட்டாராம். இது போல, கருணாநிதியை விஞ்சும் அளவுக்கு நாடகம் போடுபவர். இதனால் கருணாநிதி பொருத்தமாகவே இவரை மாநாட்டின் ஆலோசனைக் குழு உறுப்பினராக போட்டுள்ளார்.

இந்த விருதுக்கான போட்டியில் இவருக்கே விருதுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருத்தக் கணிப்பு தெரிவிக்கிறது.

பத்தாவது பரிந்துரை



பேராசிரியர் சுப.வீரபாண்டியன். தமிழ்நாட்டின் நம்பிக்கைக்கு உரிய தலைவராக இருந்தவர். சிறந்த பேச்சாளர். சிறந்த சிந்தனையாளர் என்று அறியப்பட்டவர். சிறந்த உணர்வாளர் என்றும் சொல்வார்கள். ஆனால் இவர் எப்போதுமே ஒரு டம்மி பீஸாகத்தான் இருந்திருக்கிறார் என்று விபரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

ஒரு முறை இவர் தடா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த போது, நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்கையில் கைவிலங்கு போட்டு அழைத்துச் செல்வர். இவருடன் இருந்த இசுலாமிய கைதிகள், இவ்வாறு கைவிலங்கு போடுவது, சட்டவிரோதம், நாம் இதற்காக போராட்டம் நடத்துவோம். அதில் நாம் தாக்கப் பட்டாலும் சரி என்று பேசுகின்றனர். இதற்கு சம்மதித்த சுப.வீரபாண்டியன், கைவிலங்கு போடுவதை எதிர்த்த இசுலாமிய கைதிகள் போலீசிடம் அடி பட்டு ரத்தம் ஒழுக காயம் பட்டுக் கிடக்கையில் சத்தம் போடாமல் கைவிலங்கு போட்டு போலீசோடு சென்றார் என்று கூறுகிறார்கள்.

தமிழ் என் மூச்சு, தமிழ் என் சுவாசம், தமிழ் என் உணர்வு என்று ஓவராக நெஞ்சை நக்குவார். ஆனால் ஈழத் தமிழர் கொல்லப் பட்டுக் கொண்டிருக்கையில் கருணாநிதியின் காலை நக்கிக் கொண்டிருந்தார். இவர் சிறப்பாக காலை நக்குகிறார் என்பதை அறிந்துதான் கருணாநிதி இவரை பொது அரங்க நிகழ்ச்சிக் குழு உறுப்பினராக போட்டிருக்கிறார். இதனால் இவர்தான் சவுக்கின் பத்தாவது பரிந்துரை.


சவுக்கு

Friday, June 11, 2010

செம்மொழி மாநாட்டுக்கு சவுக்கின் யோசனைகள்




செம்மொழி மாநாட்டுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக சென்னைப் பல்கலைக்கழகத்தின் கடிகார கோபுரம் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மணி அடிக்கும் போது ஒரு திருக்குறளைச் சொல்லி, அதற்கான விளக்கமும் சொல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழை வளர்க்க எப்படி ஏற்பாடுகள் பார்த்தீர்களா ?

இது போல் நூதன முறையில் தமிழை வளர்க்க, “சவுக்கின்“ ஆலோசனைகள் இதோ….
பொதுக் கழிப்பிடங்களின் கதவுகளின் உள்புறத்திலும், சுவர்களிலும், “ I Love You Meena I Love Namitha “ போன்ற வாசகங்கள் கிறுக்கப் பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

இதைத் தவிர்க்கும் பொருட்டு, அனைத்து பொதுக் கழிப்பிடக் கதவுகளுக்கும், பெயின்ட் அடித்து, கருணாநிதியின் பொன்மொழிகளான “என்து, உன்துன்னா உதடு ஒட்டாது… நம்பள்துன்னா உதடு ஒட்டும்“ என்று எழுதி போடலாம்.

“சான்றோரே… சான்றோரே… நீங்கள் என்னை கடலிலே தூக்கிப் போட்டாலும்…. போன்ற வாசகங்களை சுவற்றில் எழுதிப் போடலாம்.

இவ்வாறு செய்தால், அவசரத்துக்கு, இங்க வந்தா, இந்தக் கருமத்தையெல்லாம் வேற படிக்க வேண்டியிருக்கு என்று, பெரும்பாலான பொதுமக்கள் பொதுக் கழிப்பிடங்களை பயன் படுத்துவதற்கு, மலச்சிக்கல் எவ்வளவோ தேவலை என்று பொதுக் கழிப்பிடங்களை பயன் படுத்தவதையே தவிர்த்து விடுவார்கள்.

இதனால், தமிழ் வளர்வதோடு, பொதுக் கழிப்பிடங்களும் சுத்தமாக இருக்கும். இது மட்டுமின்றி, கழிப்பிடத்தில் தமிழ் வளர்த்த தலைவர் என்று வரலாற்றில் எழுதப் படும்.

அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்களுக்கான வருகைப் பதிவேட்டை மாற்றி விட்டு, ஒரு குயர் நோட்டு ஒன்றை கொடுத்து, தினமும் காலையில் அலுவலகம் வந்தவுடன், வருகைப் பதிவேட்டிற்குப் பதிலாக “கலைஞர்தான் தமிழ்… தமிழ்தான் கலைஞர். “ என்று ஐந்து முறை அல்லது பத்து முறை எழுதச் சொல்லாம்.

தொடர்ந்து தவறாமல் எழுதும் அரசு ஊழியர்களுக்கு, ஊக்கப் படியாக மாதம் ரூபாய் 20 என்று அறிவித்துப் பாருங்கள். இந்த இருபது ரூபாய்க்காக, 10 முறை அல்ல, தினமும் நூறு முறை எழுதுவார்கள் இந்த அரசு ஊழியர்கள்.

குழந்தைகளுக்கு பயன்படுத்தப் படும் டயப்பர்களில், தமிழ் வாழ்க, செம்மொழி வாழ்க, கலைஞர் வாழ்க போன்ற வாசகங்களை கட்டாயம் அச்சிட வேண்டும் என்று உத்தரவிடலாம்.

இதனால், குழந்தைப் பருவத்திலிருந்தே தமிழுணர்வு வளர்க்கப் படும். இது மட்டுமன்றி, ஒவ்வொரு முறையும், டயப்பரை மாற்றும், தாய்மார்கள் இதைப் படித்து தமிழுணர்வு பெறுவார்கள். இதனால், தமிழ் மொழி மென்மேலும் வளரும்.

இளம்பெண்கள் LOOK AT ME, STARE ME NOT, DON’T TOUCH போன்ற விதவிதமான வாசகங்களோடு “டிஷர்ட்டுகள்“ அணிந்து வருவார்கள். இதனால், இளைஞர்கள் இந்த வாசகங்களை படிக்க வேண்டும் என்ற இளம் பெண்களின் விருப்பமும் நிறைவேறும். இதைப் படிக்கும் சாக்கில், இளைஞர்கள் காமப் பார்வையை அள்ளி வீசவும் செய்யலாம்.

இது போன்ற “டிஷர்ட்டுகளில்“ கட்டாயம் இனி மேல் “கலைஞர் வாழ்க, செம்மொழி ஆசான் வாழ்க, திருவள்ளுவருக்கே திருக்குறளா ? கலைஞருக்கே தமிழா ? “ போன்ற வாசகங்களை வெளியிட வேண்டும் என்று உடனடியாக அரசாணை வெளியிடலாம்.

அரசாணை வெளியிட்ட மறு நாளே, டிஜிபி லத்திக்கா சரண் இந்த டிஷர்ட் அணிந்து வந்து, கருணாநிதியை சந்திப்பார். இதை கலைஞர் டிவியில் பெரிய அளவில் செய்தியாக வெளியிடலாம்.




தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் மெக்டொவெல், ஜானெக்ஷா, ரொமானாவ், பேக்பைப்பர், ஓல்ட் மங்க், ஓல்ட் சீக்ரெட் என அனைத்து சரக்குகளும் ஆங்கிலப் பெயர் கொண்டவையாகவே உள்ளது, தமிழ் மொழியின் வளர்ச்சியில் பெரும் தடையாக உள்ளது.

இதை சீர் செய்யும் பொருட்டு, கலைஞர் சரக்கு, முத்தமிழறிஞர் சரக்கு, செம்மொழிச் சரக்கு, திராவிடச் சரக்கு, என தமிழ்ப் பெயர்களில் மட்டுமே இனி மதுபானங்கள் விற்கப் படும் என அறிவிக்கலாம்.

தமிழ்ச் சரக்குகள் விற்கப் படுவதால், 24 மணி நேரமும், டாஸ்மாக் கடைகளை திறந்து வைக்கலாம். இதனால் அரசுக்கு வருவாயும் கூடும். சரக்கு வாங்கும் குடிமக்கள் மிகுந்த தமிழுணர்வோடு போதையாவார்கள்.

அந்தப் போதையும் தமிழ் போதையாக இருப்பது கூடுதல் சிறப்பு. மேலும், பெரும்பாலான டாஸ்மாக் பார்களில், அனைவரும் அடிக்கடி பயன்படுத்தும் சொல் “ஆப் பாயில்“. இதைத் தவிர்க்க, “அரை வேக்காடு“ என்ற சொல்லை கட்டாயம் பயன் படுத்த வேண்டும் என்று அனைத்து பார்களிலும் போர்ட் வைக்கலாம்.

தமிழ் கற்றுக் கொண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த செம்மொழிப் பாடலை பாடிக் காட்டும் மார்வாடிகளுக்கு, வரிவிலக்கு என்ற அறிவிப்பு வெளியிட்டால், 10 நாட்களில் சவுகார்ப்பேட்டையில் உள்ள அனைத்து மார்வாடிகளும், பாடுவதோடு அல்லாமல்,


“வெஜிடெபிள் பிரிஞ்சி தமிழுக்கு சிஎம்ஜி
ஏழை வயிறு எரிஞ்சி பூத்துக் குலுங்கும் குறிஞ்சி
மைனே பியார் கியா கலைஞர் பேரன் தயா
ஹம் ஆப்கே ஹேன் கவுன். கலைஞர் மனசு நூறு பவுன்
ஏக் துஜே கேலியே.. ஜெயலலிதா காலியே…
போன்ற கவிதைகள் பாடுவார்கள்.

இதனால், மார்வாடிகள் மத்தியில் தமிழ் வளர்த்த அறிஞர் என்று கருணாநிதியின் புகழ் வரலாற்றில் பதிவு செய்யப் படும்.

கொடநாடு என்று ஒரு இடம் இருக்கிறதே. அந்த இடத்தின் பெயர், “செம்மொழி மாநாடு“ என்று மாற்றம் செய்யப் பட்டது என்று அரசு கெஜட்டில் அறிவிப்பு வெளியிடலாம். இந்த அறிவிப்பானது, பல விளைவுகளை ஏற்படுத்தும்.

பத்திரிக்கைகள், வருடத்தில் பத்து முறையாவது, “செம்மொழி மாநாட்டில் ஜெயலலிதா“ என்று தலைப்புச் செய்திகள் வெளியிடும். இதனால், எதிர்க்கட்சித் தலைவரை செம்மொழி மாநாட்டுக்கு வரவழைத்த கலைஞர் என்று, பெயர் கிடைக்கும்.

செம்மொழி மாநாட்டில், சுவாமி நித்யானந்தா மற்றும், தேவநாதன் ஆகியோரது புதிய படங்கள் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டால், செம்மொழி மாநாட்டில் இருக்கும் கூட்டத்தைப் பாருங்கள். என்னடா இது இத்தனை பேருக்கா தமிழார்வம் என்று கருணாநிதியே ஆச்சர்யப் பட்டுப் போவார்.


ஹெல்மெட் அணிவது எப்படி கட்டாயச் சட்டம் ஆனதோ, அதே போல அனைத்து ஹெல்மெட்டுகளிலும், தமிழ் வாழ்க, செம்மொழி மாநாடு வாழ்க, கலைஞர் வாழ்க என்ற வாசகங்கள் கட்டாயம் எழுதப் பட வேண்டும் என்று உத்தரவு போடலாம். இதனால் பல்வேறு பயன்கள் உண்டு. வண்டி ஓட்டும் அனைவரும் ஹெல்மெட்டுகளைப் பார்த்து தமிழுணர்வு பெறுவார்கள். ஸ்டிக்கர் ஒட்டும் தொழிலாளர்கள், ஓவியர்கள் அனைவரும் வேலை வாய்ப்பு பெறுவார்கள். இதற்கெல்லாம் மேலாக, கருணாநிதிக்கு மிகவும் பிடித்த, காவல்றை நண்பர்கள் மாமூல் வாங்க அற்புதமான வாய்ப்பு பெறுவார்கள். கருணாநிதியை வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வாழ்த்துவார்கள்.

சவுக்கு

Sunday, June 6, 2010

அரசியலில் இருந்து ஓய்வு. ஸ்டாலின் திடீர் அறிவிப்பு.




தலைப்பை பார்த்தவுடன் அதிர்ச்சியாக இருக்கிறதா ? இது இப்போது நடக்கவில்லை. 2020ல் நடக்கிறது. கருணாநிதியின் 97வது பிறந்த நாள் முடிந்தவுடன் இந்த அறிவிப்பு வெளிவரும் என்று சவுக்குக் பிரத்யேக தகவல் வந்துள்ளது. கருணாநிதியின் 97வது பிறந்த நாள் விழாவில் அவர் பேசியதைப் பற்றி பார்க்கும் முன், 2020 எப்படி இருக்கிறது என்பதை பார்த்து விடுவோம்.

2011 தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறுகிறது. கருணாநிதி மீண்டும் முதல்வராகிறார். 2020ல் தேர்தல் சமயத்தில் மக்களுக்கு கொடுக்கப் படும் பணத்தில் நிறைய ஊழல் ஏற்படுவதாக புகார் வந்ததையடுத்து, ரேஷன் கடைகளிலேயே ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் பணம் பட்டுவாடா செய்யப் படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிடுகிறது.

இலவச கலர் டிவி, இலவச வீட்டு மனை போல, அனைவருக்கும் வருடத்திற்கு ஒரு முறை, இலவச பேண்ட் சர்ட், இலவச உள்ளாடைகள் வழங்கப் படுகின்றன.
அனைத்து காவல் நிலையங்களிலும், எஃப்ஐஆர் போட, அரெஸ்ட் பண்ண, அரெஸ்ட் பண்ணாமல் இருக்க, காணாமல் போன பொருளை கைப்பற்ற, கைப்பற்றிய பொருளை திருப்பித் தர, புகார் கொடுக்கும் போது, உட்கார வைக்க, கெட்ட வார்த்தையில் திட்டாமல் இருக்க என்று தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப் பட்டு, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

என்கவுண்டரில் ஈடுபடும் போலீசாருக்கு, மேற்படி வசூலாகும் தொகையிலிருந்து 10 சதவிகிதம் வெகுமதியாக கிடைக்கும் என்று அறிவிக்கப் படுகிறது.

டாஸ்மாக் கடைகளில் போதுமான சரக்கு கிடைப்பதில்லை என்று வந்த புகாரையடுத்து, அனைத்து மளிகை கடைகளிலும் மதுபானங்கள் விற்கலாம் என்று உத்தரவிடப் படுகிறது.

தமிழகத்தில் வரும் அனைத்து செய்தித் தாள்களிலும், முதல் பக்கத்தில் கருணாநிதியின் படம் கட்டாயம் வெளியிட வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப் படுகிறது. தவறும் நாளிதழ்களுக்கு, அரசு விளம்பரம் நிறுத்தப் படுகிறது.

தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி கிடையாது என்று உத்தரவிடப்பட்டது போதாது என்று திரையுலகத்தினர் வைத்த கோரிக்கைகளை அடுத்து, ஒவ்வொரு திரைப்படம் எடுக்கும் போது ஆகும் செலவில் 50 சதவிகிதத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவிக்கப் படுகிறது.

திரைப்படத்தில் வாய்ப்பு குறைந்த நடிக நடிகையருக்கு, அரசு வேலை என்று அறிவிக்கப் படுகிறது.

2020ல் ஏற்பட்ட ராஜ்ய சபை காலியிடத்தில் தன் மகனுக்கு இடம் வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் விடுத்த வேண்டுகோளை பரிசீலித்து, கருணாநிதி 2024ல் ஏற்படும் காலியிடத்தில் வழங்கப் படும் என்று உறுதி கூறுகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சி கலைக்கப் பட்டு திமுகவோடு இணைக்கப் பட்டு, மருத்துவர் ராமதாசுக்கு, திமுக வன்னியர் பிரிவு தலைவர் என்று பதவி வழங்கப் படுகிறது.
அதே போல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கலைக்கப் பட்டு, திமுகவின் தலித் பிரிவு தலைவராக திருமாவளவனுக்கு பதவி வழங்கப் படுகிறது.

கருணாநிதியின் “கவர் பாலிடிக்ஸ்“ முன் அரசியல் செய்ய முடியாமல் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் அழிந்து போகின்றன.

எதிர்க்கட்சியே இல்லாமல் இருந்தால், இமேஜ் நன்றாக இருக்காது என்று கருணாநிதியே, “திராவிட பின்னேற்றக் கழகம்“ என்ற ஒன்றை துவக்கி, அதற்கு, அழகிரியை தலைவராக்குகிறார்.

இப்போது டிஜிபியாக உள்ள லத்திகா சரண், ஓய்வு பெற்றதும், திமுக மகளிர் அணித் தலைவியாக ஆகிறார்.

உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட், ஓய்வு பெற்றதும், எம்எல்ஏவாகி, மந்திரியும் ஆகி, “ஒட்டுக் கேட்புத் துறை“ மந்திரியாக்கப் படுகிறார்.

சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன், நாயுடு மகாஜன சபாவின் தலைவராக தேர்ந்தெடுக்கப் படுகிறார்.

மவுரியா சிஐடி காலனி வீட்டின் “மெயின்டெனன்ஸ்“ காண்ட்ராக்டர் ஆகிறார்.
லஞ்ச ஒழிப்புத் துறை மூடப்பட்டு, “லஞ்ச பராமரிப்புத் துறை“ என்ற ஒன்று ஏற்படுத்தப் பட்டு, ஆ.ராசா அதற்கு மந்திரியாகிறார்.

ஏ.கே.விஸ்வநாதன், அப்போதும் பதவியில்லாமல், அழகிரி வீட்டில் வாட்ச்மேனாக சேர்ந்து விடுகிறார்.

வழக்கறிஞர்-காவல்துறை மோதல் குறித்த தீர்ப்பு 2024ல் வழங்கப் படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கிறது.

அரசு ஊழியர்கள் வாரத்துக்கு ஒரு முறை அலுவலகம் சென்றால் போதும், சம்பளம் மட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப் படுகிறது.

பழைய உள்துறை செயலாளர் மாலதி, அஞ்சுகம் அறக்கட்டளையின் கணக்காளர் ஆகிறார்.

காங்கிரஸ் கட்சி, 2028ல் காமராஜ் ஆட்சி அமைப்போம் என்று அறிவிக்கிறது.
இப்போது கருணாநிதியின் பேச்சு.

இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த “கலைஞர் பாராட்டு விழாத் துறை“ அமைச்சர் தம்பி துரை முருகன் அவர்களே, துணை முதலமைச்சர் குஷ்பூ அவர்களே, ஒட்டுக் கேட்புத் துறை அமைச்சர் ஜாபர் சேட் அவர்களே, நாயுடு மகாஜன சபா தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களே, மகளிர் அணித் தலைவர் லத்திக்கா சரண் அவர்களே, பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களே, இந்த விழாவை அழகாக தொகுத்து வழங்கிய, கழக முன்னோடி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே…

எனக்கு பாராட்டு விழா என்றாலே பிடிக்காது. அந்த நேரத்திலே, எப்படி மக்கள் பணி ஆற்றலாம், என்ன எழுதலாம் என்று சிந்தித்து வேலை செய்பவன் நான்.

ஆனால் துணை முதலமைச்சர் குஷ்பூ அவர்கள் இது பாராட்டு விழா அல்ல, பிறந்த நாள் விழா என்று எடுத்துக் கூறி, என்னை இசைய வைத்தார்கள். கழக ஆட்சியிலே துணை முதல்வராக இருந்தாலும், அவருக்கு நன்றி பாராட்டுதல் தமிழ்ப் பண்பு என்பதால் நன்றி கூறுகிறேன்.

இந்த விழாவுக்கு வந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள், என்னிடமிருந்து ஏதாவது செய்தியை எதிர்ப்பார்த்திருப்பீர்கள். எப்போது இவன் ஓய்வு பெறுவான், எப்போது இளைஞர் அணித் தலைவர் (?!) ஸ்டாலின் அரியணை ஏறுவார் என்று காத்திருக்கிறீர்கள்.


எனக்கு வயதாகி நான் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்தால் தானே ஸ்டாலின் முதல்வராக முடியும். நானே ஒரு இளைஞன். இதனால்தான், நான் 2010ம் ஆண்டு, இளைஞன் என்ற ஒரு படத்துக்கு வசனம் எழுதினேன்.

அந்தப் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று அருமைத் தம்பி வைரமுத்து எவ்வளவோ முயற்சி செய்தும், சில சதிகாரர்களால், ஒரு தமிழன், தமிழில் வசனம் எழுதியதற்காக ஆஸ்கர் விருது மறுக்கப் பட்டது.

இவ்வாறு ஆஸ்கர் விருது மறுக்கப் பட்ட போது, அஞ்சாநெஞ்சன் அழகிரி, உடனடியாக ஹாலிவுட் சென்று, ஒரு பத்து பேரையாவது உயிரோடு கொளுத்தலாம் என்றான். நான்தான், பெருந்தன்மையோடு வேண்டாம் என்றேன்.


இந்த வயதிலும், ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து (பன்ச்) நான் வேலை பார்த்து வருகிறேன். தமிழ்நாட்டிலே ஒரு காலத்தில், ஜெயலலிதா என்ற ஒரு அம்மையார் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவர் பல கோப்புகளை கட்டி வைத்திருந்தார். நான்தான் அவர் கட்டி வைத்திருந்த கோப்புகளையெல்லாம், 2006ல் கழக ஆட்சி வந்தவுடன், அவிழ்த்து, உடனடியாக நடவடிக்கை எடுத்தேன்.


இப்போதும் சிலர், எப்படி எனக்கு இந்த வயதிலும் இப்படி சலிக்காமல் வேலை செய்யும் தெம்ப இருக்கிறது என்று கேட்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக, தொடர்ந்து “மானாட மயிலாட“ நிகழ்ச்சியைப் பார்த்துதான் எனக்கு பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தையும், உணர்ச்சியையும் ஊட்டிக் கொள்கிறேன்.


இது போல, நீங்களும், தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பீர்களேயானால், என்னைப் போலவே ஓய்வு ஒழிச்சலின்றி பணியாற்றும், தெம்பு வரும் என்பதை இந்த நேரத்திலே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.


கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர் ஸ்டாலின் அவர்களுக்கு முதல்வர் பதவி, உரிய நேரத்தில் வழங்கப் படும். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல. கட்சியின் தலைமை நிலையக் குழு, செயற்குழு, பொதுக்குழு ஆகியவை கூடி முடிவு செய்யும்.


என்று பேசினார்.

விழா முடிந்ததும், பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஸ்டாலின், 1975ம் ஆண்டு முதல், தனக்கு பதவி தருகிறேன், தருகிறேன் என்று தொடர்ந் சொல்லி வந்த கருணாநிதி, இந்த பிறந்த நாளிலாவது பதவியைத் தருவார் என்று எதிர்ப்பார்த்தேன், ஆனால், தலைவர் அவர்கள், நான் இன்னும் இளைஞன் என்று கூறி விட்டதால், எனக்கு வாய்ப்பு எப்போதுமே வராதோ என்று தோன்றுகிறது.

இதனால், நான் பொது வாழ்வில் இருந்தும், அரசியலில் இருந்தும் ஓய்வு பெறலாம் என்று முடிவு செய்து விட்டேன் என்று ஸ்டாலின் அறிவித்தார்.


சவுக்கு

Saturday, June 5, 2010

நோயாளியான மருத்துவர் ? பாகம் இரண்டு






பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பயணம் 1989ல் தொடங்கியது.

1989ல் நடைபெற்ற தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியின்றி தனித்துப் போட்டியிட்டு, 15 லட்சத்து 36 ஆயிரத்து 350 வாக்குகளை பெற்றது. எனினும் ஓரிடத்தில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை.

1991ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாமக போட்டியிட்டு, ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அப்பொழுது பாமகவின் சின்னம் யானை. அந்தத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வெற்றி பெற்ற வேட்பாளர் பன்ருட்டி ராமச்சந்திரன். யானை சின்னத்தில் வெற்றி பெற்றதால், முதல் நாள் சட்ட மன்றத்துக்கு, பன்ருட்டி ராமச்சந்திரன் யானையில் அழைத்து வரப்பட்டார். அதே ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும், பாமக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

1996ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி, அப்போது, “திவாரி காங்கிரஸ்“ என்ற ஒரு “உப்புமா“ கட்சியை நடத்திக் கொண்டருந்த வாழப்பாடி ராமமூர்த்தியோடு சேர்ந்து போட்டியிட்டு, 4 இடங்களில் வெற்றி பெற்றது.

பாமக ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்கவில்லை என்றாலும், அந்த ஆண்டு தேர்தலில் அடித்த “ஜெயலலிதா எதிர்ப்பு அலையையும்“ மீறி, பாமக 4 இடங்களில் வெற்றி பெற்றது, அரசியல் நோக்கர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.


1998ம் ஆண்டு, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், எப்படியாவது தன் பலத்தை நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த செல்வி ஜெயலலிதா, பாட்டாளி மக்கள் கட்சியோடு கூட்டு சேர்ந்தார். இக்கூட்டணியில் நான்கு எம்பிக்களை பெற்றது பாமக.




இந்தத் தேர்தலில் இருந்துதான், மருத்துவர் ராமதாஸின் சறுக்கல் தொடங்கியது. தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் மந்திரி பதவியும் கிடைத்தது. அதுவும், மிக மிக “வளமை“ வாய்ந்த பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பதவி.

ஆண்டுதோறும், நலிவடைந்த மற்றும், தலித்துகளுக்கு, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் வழங்குவதற்காக நேர்முகத் தேர்வு நடத்தும். இந்த நேர்முகத் தேர்வுக்கு, என்னுடைய நண்பரோடு, நானும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. டிஎம்எஸ் எதிரில் உள்ள, ஸ்ரீலேகா இன்டர்நேஷனல் ஹோட்டலில்தான் நேர்முகத் தேர்வு நடந்தது.

அங்கே இருந்த, நேர்முகத் தேர்வு நடத்தும் அதிகாரியின் பி.ஏ, விண்ணப்பித்திருந்த என் நண்பரைப் பார்த்துச் சொன்னது, “இந்த இன்டர்வ்யூ எல்லாம் வெரும் ஐ வாஷ் சார். நேரா, தைலாபுரம் தோட்டத்துக்கு போயி, டாக்டர பாருங்க. அவர் நெனச்சா உங்களுக்கு அலாட்மென்ட் உண்டு. ஒரு அலாட்மென்ட்டுக்கு ரெண்டு லட்சம் ஆகும்“ என்று கூறினார்.


இந்த 1998ற்குள், ராமதோசோடு, ஆரம்பகாலத்தில் இருந்த அறிவு ஜீவிகள் அனைவரும் சிறிது சிறிதாக ராமதாஸ் கட்சி நடத்தும் போக்கைப் பார்த்த விலகத் தொடங்கினர்.
1998ல் பதவியில் இருந்த பிஜேபி அரசு, 13 மாதங்கள் பதவியில் இருந்தது. இந்த 13 மாதங்களில், ராமதாஸ், கோடிகளுக்கு அதிபதி ஆனார்.

திடீரென்று, பணமும், செல்வாக்கும் கொழிக்கத் தொடங்கின. இதில் ருசி கண்ட பூனையான மருத்துவர் அய்யா, கம்யூனிசம், தமிழ் உணர்வு, கொள்கை, கோட்பாடு, அனைத்தையும், பணம் சம்பாதிக்க ஒரு அருமையான வழி என்று உணர்ந்தார்.


சில்லரை வாணிபத்தை ஒழிக்கும், எம்என்சிக்களுக்கு எதிராகவும், குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனம், சில்லரை வணிகத்தில் இறங்குவதற்கு எதிராகவும், பெரும் போராட்டத்தை அறிவித்த ராமதாஸ், சில நாட்களிலேயே, சத்தம் இல்லாமல், கொள்கையை கக்கத்தில் செறுகிக் கொண்டு, அமைதியானது இதற்கு ஒரு உதாரணம்.

இதற்கிடையில், தங்களுக்கு புதிதாக கிடைத்துள்ள அதிகாரம் பற்றி, வன்னிய சமுதாய மக்களுக்ளு ஒரே பூரிப்பு. தங்கள் சமுதாயத்தை வாழ்வாங்கு வாழ வைக்க வந்து விட்டார் தமிழ்க் குடிதாங்கி என்று மருத்தவர் ராமதாசை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். ஆனால், ராமதாசைப் பொறுத்த வரை, வன்னிய சமுதாயம் என்பது, அவரது குடும்பத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை, மக்கள் வெகு தாமதமாகத்தான் உணர்ந்தார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி, தங்கள் கட்சியின் சின்னமாக, மாங்கனிக்குப் பதிலாக, குரங்கைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அப்படி, மரத்துக்கு மரம் தாவும் குரங்கு போல, அடுத்த ஆண்டே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவை அப்படியே தொங்கலில் விட்டு விட்டு, திமுக அணிக்குத் தாவினார், மருத்துவர் ராமதாஸ்.



அந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 5 எம்.பி சீட்டுக்களைப் பெற்று, 22 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.

2001ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் அடுத்த மரமான, அதிமுகவுக்கு வெட்கமேயில்லாமல் தாவியது. இப்போது, ஜெயலலிதாவை, போயஸ் தோட்டம் சென்று சந்தித்த, ராமதாஸ், தங்களுக்கு எத்தனை இடம் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு “அன்புச் சகோதரி முடிவு செய்வார்“ என்று சகோதர பாசத்தை கொட்டினார். இத்தேர்தலில், 20 எம்எல்ஏக்களைப் பெற்றது பாமக.

2004ம் ஆண்டு நடந்த சட்டசபைக்கான பொதுத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்று, 18 இடங்களில் வென்றது.

இதையடுத்து, 2009ல் பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், “மரம் தாவும்“ தனது கொள்கையை மறந்து விடக் கூடாது என்று, மீண்டும் அதிமுக அணிக்குத் தாவி தேர்தலில் போட்டியிட்டது.

இந்தத் தேர்தலில் இடம் ஒதுக்குகையில், ஜெயலலிதாவை சந்தித்து விட்டு, மருத்துவர் ராமதாஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இப்படி கூறினார்.

''அன்புச் சகோதரியை சந்தித்தது, மகிழ்ச்சியான தருணம். 45 நிமிடங்கள் அரசியல் நிலவரம், சமூகப்பிரச்னைகள் குறித்துப் பேசினோம்.ஈழத்தமிழர்கள் பற்றித்தான் அவர் நிறைய நேரம் பேசினார். அந்தப் பேச்சில், கலைஞரைப் போல எதுகை-மோனை வசனம் எல்லாம் இல்லை. உண்மையான இரக்கம் இருந்தது. அவரிடம் நிறைய மாற்றங்கள் தெரிந்தன''

இதுதான் ராமதாசின் பச்சோந்தித் தனம். இப்படிப் பேசி விட்டு, இன்று தன் மகனுக்கு, ராஜ்ய சபா சீட் வேண்டும் என்றவுடன், கருணாநிதிக்கு பாத பூஜை செய்ய பாமக எம்எல்ஏக்களை அனுப்பினால், அதை ஏற்றுக் கொண்டு, ராஜ்ய சபா சீட் கொடுக்க, கருணாநிதி என்ன அப்படி ஒரு ஏமாளியா ?



2009 பொதுத் தேர்தல், பாட்டாளி மக்கள் கட்சிக்கு நெப்போலியனின் வாட்டர்லூ வாக மைந்தது.

போட்டியிட்ட அனைத்து இடங்களிலும், பாட்டாளி மக்கள் கட்சி “மண்ணைக் கவ்வியது“.

இந்தத் தேர்தலில், தேர்தலுக்குத் தேர்தல் அணி தாவும், இந்தக் கட்சிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று மக்கள் எண்ணியது மட்டுமல்லாமல், திமுகவும் கங்கணம் கட்டிக் கொண்டுவேலை செய்தது. இதனாலேயே, பாமக, அனைத்து இடங்களிலும் மண்ணைக் கவ்வியது.

அணி தாவும், குழப்பங்கள் மட்டுமின்றி, வன்னிய சமுதாய மக்களே, மருத்துவர் அய்யாவை கைவிட்டனர். இதுதான், பாமகவின் மிகப் பெரிய சரிவாக அமைந்தது.



1998ல் பதவி சுகத்தை அனுபவிக்கத் தொடங்கிய மருத்துவர் அய்யா, அதற்குப் பிறகு, எப்படியாவது, பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தொடர்ந்து அணி மாறியதன் விளைவே, இன்று தெருக் கோடியில் நிற்கிறார்.



நண்பரோடு ஒரு நாள், தைலாபுரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நண்பர், ஒரு முக்கியமான பத்திரிக்கையாளர். திமுக அரசில் நடக்கும் ஊழல்கள் குறித்து சில முக்கிய ஆவணங்கள் அந்த நண்பருக்கு கிடைத்ததால், அதை மருத்துவர் அய்யாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முதன் முறையாக அவரைச் சந்திக்கச் சென்றார். காலை 9.30 மணிக்கு தைலாபுரம் சென்றவர், மருத்துவரைச் சந்திக்க மதியம் 2 மணி ஆகி விட்டது.

அது வரை, தொண்டர்களோடு தொண்டர்களாக, மரத்தடியில் நண்பரோடு காத்துக் கிடந்தோம்.

அங்கே மருத்துவரைச் சந்திக்க இரு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். தனிமையில் ரகசியமாக சந்திக்க வேண்டியி ருந்ததால், கூட்டம் குறையும் வரை காத்திருக்கலாம் என்றார் நண்பர்.

மதியம் சுமார் 12.30 மணிக்கு, ஒரு ஹோண்டா எஸ்யுவி வண்டி வந்தது. அந்த வண்டியில் மருத்துவர் அய்யாவின் மருமகள் சவும்யா வந்து இறங்கினார். வண்டியின் டிக்கியை திறந்ததும், சுமார் 50க்கும் மேற்பட்ட, சென்னை சில்க்ஸின் பட்டுப் புடவை டப்பாக்கள் இருந்தன. அங்கே கூடியிருந்த, தொண்டர்கள் போட்டி போட்டுக் கொண்டு அய்யாவின் மருமகளுக்கு அந்தப் பெட்டியை தூக்கிச் செல்ல உதவிக்கு ஓடினர். ஐம்பது பட்டுப் புடவைகள் என்றால் விலை என்ன இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். இதுதான் மருத்துவர் அய்யாவின் இன்றைய நிலை.




அதற்குப் பிறகு, நண்பர், திமுக அரசுக்கு எதிரான ஆவணங்களை மருத்துவர் அய்யாவிடம் வழங்க, அந்த ஆவணங்களை வைத்து, ராமதாஸ், பல நாட்கள் அறிக்கை யுத்தம் நடத்தி, கருணாநிதிக்கு, காலில் தைத்த முள்ளாய் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது, வேறு கதை.

கட்சி தொடங்கிய காலத்தில் “என் கட்சியில் யாராவது ஊழல் செய்தால், அவர்களை சவுக்கால் அடியுங்கள்“ என்று சொன்ன மருத்தவர் ராமதாஸ், முன்னாள் நக்சலைட்டுகளை தன் கட்சியின் கொள்கையை வகுப்பவர்களாக வைத்திருந்த மருத்துவர் ராமதாஸ், அம்பேத்கரின் கொள்கையை உயர்திப் பிடிப்பதற்கென்றே, கட்சியின் கொடியில் நீலத்தை சேர்த்த மருத்துவர் ராமதாஸ், கம்யூனிஸ்ட் கொள்கைகளை தூக்கிப் பிடிக்கும் லட்சியத்தோடு தன் கட்சியின் கொடியில் சிகப்பு நிறத்தை சேர்த்த மருத்துவர் ராமதாஸ், சில்லரைக் காசுகளை பெற்றுக் கொண்டு, ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் ராமதாஸ், இன்று, தன் மகனுக்கு ஒரு எம்பி சீட் கொடுங்கள் என்று, கோபாலபுரத்தில் மடியேந்திப் பிச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.



கருணாநிதி, எல்லாருக்கும் கொடுக்கும் அல்வாவைப் போலவே, அடுத்த முறை சீட் கொடுக்கப் படும் என்று சொல்கிறார். மீண்டும், ஜெயலலிதா பக்கம் போனால் சீட் கிடைக்குமா என்ற நப்பாசையோடு காத்திருக்கிறார். ஜெயலலிதா, அதிமுக வேட்பாளர்களை அறிவித்தவுடன், திமுகவுடன் கூட்டணி என்று அறிவிக்கிறார்.

ஒவ்வொடு முறை அணி மாறும் போது, அதிகாரம் கிடைத்த மமதையில், எந்த வன்னிய மக்களின் வாக்குகளால், வளர்ந்தாரோ, அந்த வன்னிய இன மக்களை மறந்து, தன் குடும்பத்தை தூக்கிப் பிடித்தால், கோடிகள் இருந்தாலும், தெருக் கோடிக்கு வந்து விட்டார்.

சிந்து பைரவி படத்தில் கதாநாயகன் சிவக்குமார், ஒரு பெரிய சங்கீத வித்வானாக இருப்பார். காதல் பிரச்சினையால் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி வீடு வாசல், கார் அத்தனையையும் விற்று குடிக்கத் தொடங்கி விடுவார். ஒரு நாள் குடிக்க காசு இல்லாத போது, தனக்கு தொழில் எதிரியான சிவச்சந்திரனின் வீட்டில் நடக்கும் ஒரு பார்ட்டிக்கு போனால், சரக்கு கிடைக்கும் என்று போவார். பழைய தொழில் போட்டியில், சிவச்சந்திரன், சிவக்குமாரை அவமானப் படுத்த வேண்டும் என்பதற்காக மேடையில் பாடும் பாட்டு வேண்டாம், டப்பாங்குத்து பாட்டுப் பாடினால் சரக்குத் தருவதாக சொல்கிறார். குடி வெறியில், சிவக்குமாரும்,

“தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக் குட்டி நான்….
இந்தச் சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி…. ….. ….. ….. ….. “
மகாராஜா பிச்சை கேட்டு இங்கு பாடுறான்…..“
என்று பாடுவார்.

பாடலின் முடிவில், சிவக்குமாரின் வேட்டி அவிழ்ந்து விழ, பட்டா பட்டி அண்டர்வேரோடு நிற்பார்.

சினிமாவில், சூரியன் வழுக்கி சேற்றில் விழுந்தது. அரசியலில், செந்தாமரை வழுக்கி சேற்றில் விழுந்து, சூரியனிடம் காய்கிறது.


சவுக்கு

Friday, June 4, 2010

நோயாளியான மருத்துவர் ? பாகம் ஒன்று




டாக்டர்.ராமதாஸ். இந்தப் பெயரோடு வன்னியர் சங்கத் தலைவராக தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். பிறகு, தமிழார்வம் காரணமாக, மருத்துவர் ச.ராமதாசு என்று மாறி, பிறகு ‘தமிழ்க்குடிதாங்கி’ என்று ஆகியது.

யார் இந்த ராமாதாஸ் ? தமிழகத்தின் மிக மிக முக்கியமான தலைவராக உருவாகியிருக்க வேண்டியவர். ஆனால், காலம் அவரை மிக மிக கடைந்தெடுத்த ஒரு சந்தர்ப்பவாதியாக மாற்றி, புயலில் சிக்கிய ஓலைக்குடிசையின் கூரையாக மாற்றிப் போட்டிருக்கிறது.

ஒரு சாதாரண மருத்துவராகத்தான் தன் பொது வாழ்வை துவக்கினார், மருத்துவர் ராமதாஸ். திண்டிவனத்தில் இன்று இருக்கும் பாலத்தின் அருகேதான் அவரது கிளினிக் இருந்தது. மிகக் குறைந்த செலவில் வைத்தியம் பார்த்ததாகவும், அவரது கிளினிக்கில் பணியாற்றும் ஊழியர்களைக் கூட, மிகுந்த மரியாதையோடு நடத்தியதாகவும் தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

வன்னிய சமுதாய மக்கள் ஒரு கணிசமாக வாக்கு வங்கியாக இருந்தாலும், தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் பதவி, அரசுப் பதவி போன்றவற்றில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப் படவில்லை என்பது அவர்களின் மிகப் பெரிய மனக்குறையாக இருந்தது. இது போன்ற நிராகரிப்புகளுக்கும், புறக்கணிப்புகளுக்கும் ஆட்சியாளர்கள்தான் காரணம் என்று வன்னிய மக்கள் பெரும்பாலும் நினைத்தனர்.

இந்தச் சூழலில்தான், வன்னியர் சங்கத்தின் முக்கியப் பொறுப்புக்கு வருகிறார் மருத்துவர் ராமதாஸ்.

1980களில், வன்னிய சமுதாயத்தின் இந்த குமுறல், பெரியதொரு போராட்டமாக வெடித்தது. தென் மாவட்டங்களுக்கும், வட மாவட்டங்களுக்கும் இருந்த தொடர்பு முற்றிலும் அறுந்து போனது. இந்தப் போராட்டம் நடக்கையில், மீன்சுருட்டியில் இருந்தது ஞாபகம் இருக்கிறது. நெடுஞ்சாலையின் குறுக்கே மரங்கள் வெட்டிப் போடப்பட்டன. போக்குவரத்து 10 நாட்களுக்கு முற்றிலும் ஸ்தம்பித்தது.

அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர், பேச்சுவார்த்தையின் மூலம், இந்தப் பிரச்சினையை முடிக்காமல், அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த மோகன்தாஸ் என்ற காவல்துறை அதிகாரியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, காவல் துறையை விட்டு போராட்டத்தை அடக்க முற்பட்டார். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் இறந்தனர்.

அந்தப் போராட்டம், மருத்துவர் ராமதாசை வன்னிய மக்கள் மத்தியில் பெரிய சக்தியாக அடையாளம் காட்டியது. அந்த அங்கீகாரத்தை சரியான முறையில் பயன் படுத்த வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ், உண்மையிலேயே முயன்றார்.

அப்போது வன்னியர் சங்கத்தின் முக்கிய முழக்கம், "தேர்தல் பாதை, திருடர் பாதை" "தேர்தலை புறக்கணியுங்கள்" என்பதுதான். இந்த முழக்கம், 80களின் தொடக்கத்தில், தமிழகத்தில் ஓரளவு பரவலாக கால் ஊன்றியிருந்த நக்சலைட் இயக்கத்தின் பார்வையை வன்னியர் சங்கத்தின் பக்கம் திருப்பின.

80களின் இறுதியில், நக்சலைட் இயக்கங்கள், காவல்துறையின் கொடிய அடக்குமுறையாலும், இப்போது போல, தகவல் தொடர்பு அப்போது வளர்ந்திருக்க வில்லை என்பதாலும், சிதைந்து போனது. அப்போது நக்சலைட் இயக்கங்களில், சித்தாந்த ரீதியாகவும், அறிவு ஜீவிகளாகவும் அறியப்பட்ட, பேராசிரியர்களும், கல்வியாளர்களும், சிந்தனையாளர்களும், நக்சலைட் இயக்கத்தின் சிதைவால், தங்களை வன்னியர் சங்கத்தோடு இணைத்துக் கொண்டனர்.




இவ்வாறு இவர்கள் இணைத்துக் கொண்ட வேளையில் தான், மருத்துவர் ராமதாஸ், வன்னியர் சங்கத்தை, அந்த மிகப் பெரும் போராட்டம் தந்த பலத்தில் அரசியல் இயக்கமாக உருவாக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தார்.

அப்போது அரசியல் சித்தாந்த ரீதியாக மிகப் பெரிய அறிவு ஜீவிகளாக இருந்த, திருப்பூரைச் சேர்ந்த கருணா மனோகரன் மற்றும், பேராசிரியர் மூர்த்தி ஆகியோர், பாட்டாளி மக்கள் கட்சி என்று இக்கட்சிக்கு பெயர் வைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றனர். பாட்டாளி என்ற பெயர் வருவதற்கு காரணம், இவர்கள் இருவரைப் போன்ற முன்னாள் நக்சலைட்டுகள் தான். அப்போது, இவர்களோடு இணைந்து இருந்தவர், இப்போது பிரபா.கல்விமணி என்று அறியப் படும், பேராசிரியர் கல்யாணி.

வன்னியர்கள் மட்டுமல்லாமல் பாட்டாளி மக்கள் அனைவருக்காகவும் பாடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயரிடப் பட்டது.

கருணா மனோகரன் மற்றும், பேராசிரியர் மூர்த்தி ஆகிய இருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைத் திட்டங்கள் என்று, தனித்தனியே இரண்டு அறிக்கைகளை அளிக்கின்றனர்.

அந்த அறிக்கைகளில், தமிழ்வழிக் கல்வி, பிற்பட்டோர்-தாழ்த்தப் பட்டோர் ஒற்றுமை, உழைப்பாளி மக்களின் உரிமைகளை நிலைநாட்டுதல், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தல் போன்ற முற்போக்கான பல கொள்கைகள் அதில் இடம் பெற்றன.

இந்த இரண்டு அறிக்கைகளும், பேராசிரியர் கல்யாணியின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பல முறை விவாதிக்கப் பட்டன. பேராசிரியர் மூர்த்தி அவர்கள், ஒரு அரசியல் கட்சி என்பது, சாதிகளின் கூட்டமைப்பே. அதனால், அனைத்து சாதியினருக்கும், உரிய அங்கீகாரம் பாட்டாளி மக்கள் கட்சியில் வழங்கப் பட வேண்டும் என்று முன் மொழிந்தார். இவரின் இந்த வாதத்தை மருத்துவர் ராமதாஸ் உடனடியாக ஏற்றுக் கொண்டார்.



அதன் படியே, வள்ளிநாயகம் என்ற தலித்துதான், பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்டார். சிறுபான்மை சமுதாயத்தினருக்கு, உரிய அங்கீகாரம் வழங்கப் பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே, 13 ஆண்டுகளாக சிறையில் இருந்து சமீபத்தில் வெளி வந்திருக்கும், குணங்குடி ஹனீபா, பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் பொருளாளராக நியமிக்கப் பட்டார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைத் திட்டங்கள் ஏற்கப் பட்டு, தலித்துகளுக்கு ஆதரவாக, தமிழகத்தின் பல இடங்களில் மருத்துவர் ராமதாஸ் போராட்டங்களை நடத்தினார். பல இடங்களில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார்.

பேராசிரியர் மூர்த்தி, கருணா மனோகரன், பேராசிரியர் கல்யாணி போன்றோருடன், பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்தும் நிர்வாகக் குழுவில், பி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் தீரன், விமலா மூர்த்தி போன்ற பலர் இருந்து மருத்துவர் ராமதாசோடு சேர்ந்து, கட்சியை திறம்பட வழிநடத்தினர்.

பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருந்தாலும், 1992ல் அக்கட்சி நடத்திய "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" பாட்டாளி மக்கள் கட்சியின் பலத்தையும், உணர்வையும் தமிழகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

1992 என்பது, ராஜீவ் மரணத்துக்கு மறு ஆண்டு. அப்போது "தடா" என்ற கடுமையான ஆள் தூக்கிச் சட்டம் அமலில் இருந்தது. விடுதலைப் புலிகள், பிரபாகரன் என்ற பெயரைச் சொன்னாலே, தடா சட்டம் பாயும் என்தான ஒரு சூழல் அது.



அந்தச் சூழலில், பிரபாகரன் படங்களையும், புலிக் கொடிகளையும் ஏந்தி, பெரியார் திடலில், "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" நடை பெற்றது. மிகப் பெரும் பலத்தோடு அப்போது ஆட்சியில் இருந்த, காவல்துறையை வைத்து, நீதிபதியின் மருமகன் மேலெல்லாம் கஞ்சா வழக்கு போடும் நிலையில் செல்வி.ஜெயலலிதா இருந்தார். இருந்த போதும், பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய இந்த மாநாடு, ஜெயலலிதாவை திகைக்க வைத்தது. ஜெயலலிதா, இவரைப் பார்த்து உண்மையிலேயே அஞ்சினார் என்பதுதான் உண்மை. பழ.நெடுமாறன் உள்ளிட்டோரை தடா சட்டத்தின் கீழ், கைது செய்து சிறையில் அடைத்த ஜெயலலிதா, பின்னாளில் பயன்படுவார் என்று உத்தேசித்தோ என்னவோ, மருத்துவர் ராமதாசை கைது செய்ய எத்தனிக்க வில்லை.

"தடா" சட்டத்தை எதிர்த்து, அடக்குமுறை சட்டம் எதிர்ப்பு இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை மருத்துவர் ராமதாஸ் தன் தோழர்களோடு சேர்ந்து தொடங்கி, தமிழகம் முழுக்க, தடா சட்டத்தை எதிர்த்து இயக்கங்களை நடத்தினார்.

இது தவிர தமிழகம் முழுக்கவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான நிகழ்வுகளில், மருத்துவர் ராமாதாசோடு இணைந்த அணி, பல்வேறு செயற்பாடுகளை நிகழ்த்தியது. தமிழகம் முழுக்க, தலித்துகள் தொடர்பான பிரச்சினைகளில், மருத்துவர் ராமதாஸ் தலையிட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார் என்று, அவருடன் பணியாற்றியவர்கள் சொல்கிறார்கள்.


ஆரம்ப காலத்தில், மருத்துவர் ராமதாஸ், திண்டிவனத்தில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த போது, அவரைச் சந்தித்தவர்கள் சொல்கிறார்கள். அவர் மேசையின் மேல் ஒரு “சைபால்“ டப்பா வைத்திருப்பாராம். வைத்தியம் பார்க்க வரும் நோயாளிகளிடம், மருத்துவ கட்டணத்தை அந்த டப்பாவில் போடச் சொல்லுவாராம்“. யாராவது அவரைப் பார்க்க வந்தால், அந்த டப்பாவிலிருந்து, சில்லரைக் காசுகளை எடுத்து, அருகில் உள்ள தேநீர்க் கடையில் பால் வாங்கி வந்து, கொடுத்து உபசரிப்பார் என்று கூறுகிறார்கள்.

அப்போதெல்லாம் தனக்கு நெருக்கமானவர்களிடம், தனது மகன் அன்புமணி பற்றி, எப்போதும் குறை பட்டுக் கொள்வார் என்கிறார்கள். தனக்கு நெருக்கமானவர்களிடம், “பாருங்க சார், படிக்கவே மாட்டேங்குறான். எப்ப பாத்தாலும், அவங்க வீட்டுலேயே (சம்பந்தி கிருஷ்ணசாமி ) கெடக்குறான். பாருங்க இவன் டாக்டராவான்னு நம்பி, டிட்கோவுல 20 லட்ச ரூபா லோனப் போட்டு, மருத்துவமனை கட்டியிருக்கேன். இவன் என்னடான்னா படிக்கவே மாட்டேங்குறான். லோன எப்படிக் கட்டப் போறேன்னு தெரியல“ என்று புலம்புவார் என்று கூறுகிறார்கள்.

இப்போது லோன் திருப்பிக் கட்ட கஷ்டப் படக்கூடிய நிலையிலா டாக்டர் இருக்கிறார் ? இதுதான் அன்றைய மருத்துவர் ராமதாஸ்.

தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை விட, சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்போடு செயல்பட்டார்.

இதற்கு அவரோடு இணைந்து பணியாற்றிய பேராசிரியர் கல்யாணி போன்றோர் மிக முக்கிய காரணிகளாக இருந்திருக்கின்றனர். பேராசிரியர் கல்யாணியிடம் பேசிய போது, மருத்துவர் ராமதாஸ், அவரைப் போன்ற பேராசிரியர்களும், முன்னாள் நக்சலைட்டுகளும், வழங்கும் ஆலோசனைகளை உடனடியாக கேட்டுக் கொண்டு செயல்படுத்துவார் என்று நினைவு கூறுகிறார்.

இன்றைக்கு இருப்பது போன்ற வன்னியர் அறக்கட்டளையும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களும், அப்போது ராமதாஸிடம் இல்லை.

ஒரே ஒரு கார் வைத்திருந்தாராம். அந்தக் காருக்கும் பெட்ரோல் போட்டு கட்டுப்படியாகாது என்பதால், கூட்டங்களுக்கு அழைப்பு வரும்போதெல்லாம், பேருந்தில் சென்று இறங்குவார். இறங்கிய இடத்திலிருந்து கட்சிக்காரர்கள் ராமதாசை காரில் அழைத்துச் செல்லுவார்கள் என்று, திண்டிவனத்தில், ராமதாசோடு சேர்ந்து பணியாற்றியவர்கள் கூறுகின்றனர்.

“தேர்தல் பாதை திருடர் பாதை“ என்று வன்னியர் சங்கம் எந்த முழக்கத்தை முன் வைத்ததோ, அந்த முழக்கம் மருத்துவர் ராமதாஸ் விஷயத்தில் உண்மையாகிப் போனது. 1989 ஆண்டு முதலே, பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலில் போட்டியிட்டாலும், அக்கட்சிக்கு, ஒரு கணிசமான வெற்றியையும், அரசியல் அதிகாரத்தையும் பெற்றுத் தந்தது 1998ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்தான்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அரசியலும், அதன் சரிவும், இரண்டாம் பாகத்தில்.

சவுக்கு

Wednesday, June 2, 2010

திமுக: துரோகங்களின் காலம் 2.





தற்போது அறிவிக்கப் பட்டுள்ள திமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்கள் மூன்று பேரும் எப்படி கட்சித் தாவி வந்தவர்கள், அவர்களின் வரலாறு என்ன என்பதைப் பற்றி பார்த்தோம். டி.எம்.செல்வகணபதி குறித்து, பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்கும் என்பதால், அவர் குறித்து விரிவாகச் செல்லவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கம், தந்தைப் பெரியார், கடும் எதிர்ப்பையும் மீறி மணியம்மையை திருமணம் செய்ததால் உருவானது. ஒரு வேளை தந்தை பெரியார், மணியம்மையை திருமணம் செய்யாது போயிருந்தால், திமுக என்று ஒரு இயக்கம் உருவாகாமலே போயிருக்கலாம்.

அன்றைய திமுகவில் இருந்த தலைவர்களும், தொண்டர்களும், ஏறக்குறைய அத்தனை பேருமே, தந்தை பெரியாரால், கவரப்பட்டு, அவர் கொள்கைகளுக்காக அரசியலுக்கு வந்தவர்கள்.

இன்று கரம் கோர்த்து, கூடிக் குலாவி, ஆரத் தழுவி ஆர்ப்பரிக்கும் காங்கிரஸ் கட்சிதான் அன்றைக்கு, திமுக தலைவர்களை தேடித் தேடி கைது செய்தது. 1950ம் ஆண்டு, குன்றத்தூரில் ஒரு சாதாரண பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்து, அக்கூட்டத்தில் தலைமையேற்று பேச இருந்த என்வி.நடராஜனை வழியிலேயே கைது செய்தது காவல்துறை.
1950 முதல், 1958 வரை, மத்தியிலிருந்து, எந்த அமைச்சர்கள் வந்தாலும், அவர்களுக்கு கருப்புக் கொடி காட்டப் பட வேண்டும் என்ற கழகத்தின் முடிவை, ஆர்ப்பரிப்போடு, ஏற்று நடத்திக் காட்டினர் திமுக தொண்டர்கள்.

இந்த கருப்புக் கொடி ஆர்ப்பாட்டங்களுக்கு, ஜவகர்லால் நேருவும் தப்பவில்லை.
இது போல ஒரு முறை, ஜனவரி 1950 6ம் தேதி, தமிழகம் வர இருந்த ஜவகர்லால் நேருவுக்கு கருப்புக் கொடி காட்டப் படும் என்று அறிவிப்பு வெளியிடப் பட்டது. காங்கிரஸ் அரசு, 31 டிசம்பர் 1957 முதல், அனைத்துப் பொதுக்கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் தடை விதித்தது.


திருவல்லிக்கேணியில் ஜனவரி 3ம் தேதி பொதுக்கூட்டம் அறிவிக்கப் பட்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்கு வருகை தரும் வழியிலேயே அண்ணா துரை கைது செய்யப் பட்டார். எம்.ஜி.ராமச்சந்திரன் உட்பட, திமுகவின் பல்வேறு தலைவர்கள் கைது செய்யப் பட்டனர்.
எத்தனை கைதுகள் நடந்தாலும், திட்டமிட்டபடி விமான நிலையத்திலிருந்து வரும் வழியில் கிண்டி அருகே, பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டப் பட்டது. இதில் நடந்த தடியடியில் இருவர் இறந்தனர். பலர் காயம் அடைந்தனர். இதில் சம்பந்தப் பட்ட அனைவரையும் நான்கு நாட்கள் கழித்து விடுதலை செய்த காங்கிரஸ் அரசு, அனைவருக்கும் 25,000/- அபராதமும், கட்டத் தவறினால் 10 நாட்கள் சிறை என்றும் உத்தரவிட்டது.

அண்ணாதுரை உட்பட அனைவரும் பணம் கட்ட மறுத்து சிறையிலேயே இருந்தனர். ஆனால் காங்கிரஸ் அரசு, அவர்கள் அனைவரையும் நான்கு நாட்களில் விடுதலை செய்து, அதற்க பதிலாக அவர்கள் சொத்துக்களை ஜப்தி செய்து ஏலத்தில் விட்டு, பணத்தை வசூல் செய்தது.


இப்படிப்பட்ட உழைப்பாலும், தியாகத்தாலும் உருவானதுதான் இந்த திமுக. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கு, பாமர மக்களின் மத்தியில் அதற்கு வளர்ந்த செல்வாக்குக்கு, எம்ஜிஆரின் கவர்ச்சி ஒரு பெரிய காரணம் என்பதை கருணாநிதியால் கூட மறுக்க முடியாதே ?

எம்ஜிஆர் இறக்கும் வரையில், கருணாநிதியால் எகிறி எகிறிக் குதித்தும், ஆட்சியை பிடிக்க முடியவில்லையே !

திமுகவில் பல போராட்டங்களில் கலந்து கொண்டு, இறக்கும் தருவாயில், நோய் வாய்ப்பட்டு, ஏழ்மையில் கஷ்டப்பட்ட, பன்மொழிப் புலவர், அப்பாதுரைக்கு, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி எந்த உதவியும் செய்யவில்லை.

இது போன்ற துரோகங்களை மறைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கருணாநிதி, தன்னுடைய வரலாறை தானே “நெஞ்சுக்கு நீதி“ என்று எழுதி வருகிறார்.
பல பேருடைய தியாகங்களிலும், உழைப்பிலும் உருவான இந்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்று யாருக்கப் பதவி ?

கருணாநிதியின், மகன், மகள், பேரன், கொள்ளுப் பேரன், மருமகன், மருமகன் வயிற்றுப் பேரன் என்று, ஆலமரம் விழுதுகள் விடுவது போல, தன் குடும்பத்தை தமிழகம் முழுதும் வளர்த்துள்ள கருணாநிதியின் வாரிசுகள் அல்லவா இன்று யாருக்குப் பதவி என்பதை நிர்ணயிக்கிறார்கள்.




திமுகவின் உயர்நிலைக் குழு என்று பேருக்கு ஒரு கூட்டத்தை கூட்டி, அந்தக் கூட்டத்தில் என்னபோ, அனைவரின் கருத்துக்கும் மதிப்பளித்து முடிவெடுப்பது போன்ற நாடகம் வேறு.
இப்படி வேறு கட்சிகளுக்குப் போய், அந்தக் கட்சியில் சுகங்களை அனுபவித்து விட்டு, அந்தக் கட்சியில் நெருக்கடி என்றதும், திமுகவுக்குத் தாவி வந்த அரசியல்வாதிகளுக்கு அலங்காரம் செய்து, பட்டாடை போர்த்தி, பதவி கொடுத்து அலங்காரம் பார்க்கும் அவல நிலைக்கு இன்று திமுக இறங்கிப் போய் விட்டது.

இன்றே இந்த நிலையென்றால், நாளை கருணாநிதிக்குப் பிறகு திமுகவின் நிலை என்ன என்று எண்ணிப் பாருங்கள்.

சவுக்கு