Monday, August 11, 2014

வேட்டி கட்டிக்கொண்டு கொள்ளையடியுங்கள்

வேட்டி பிரச்சினை பூதாகாரமாக ஆக்கப்பட்டு இப்போது சட்டமும் வந்தாகிவிட்டது.  தமிழ் இந்து செய்தி இணைப்பு



இவ்வாறாக தமிழ் மரபுகளைக் காத்துவிட்ட புரட்சித் தாய் ஜெயலலிதாவிற்கு பல தரப்பினரும் வாழ்த்துப்பா பாடிய வண்ணமிருக்கின்றனர்.

உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் வேட்டி கட்சிச் சென்றதால், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில் எழுந்த சர்ச்சையை ஒட்டி, 61 பேர் இறந்த முகலிவாக்கம் சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் வசதியாக புறந்தள்ளி விட்டு, வேட்டியின் புகழ் பாடி, ஒரு வாரத்துக்கு வேட்டி புராணம் பாடியவண்ணம் இருந்தன.  அந்த ஒரு வாரத்துக்கு சமூக வலைத்தளங்களிலும், தமிழக அரசியல் களங்களிலும், வேட்டியே பிரதான இடத்தைப் பிடித்தது.  

வேட்டி அணிந்த கனம் கோர்ட்டாரை மட்டுமா வெளியில் நிறுத்துகிறது? நீதியையும் கூட தங்களது கட்டிடத்திற்கு வெளியே நிறுத்திவிடும் வல்லமை அதற்குண்டு.

ரசிகர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் முடிவுகளை முன் கூட்டியே இப்படித் தான் இருக்கவேண்டும் என தீர்மானிப்பது, அந்த ஒரு ஆற்றலை வைத்துக்கொண்டு என்ன முடிவு, எத்தனை ரன், எப்போது விக்கெட் என்பதை ஒட்டி சூதாட்டம் இப்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பெயர் உலகின் மூலை முடுக்கெங்கும் நாறிப்போனது.
வாரியத்தின் தலைவர் இண்டியா சிமெண்ட்சின் நிர்வாக இயக்குநர் என்.ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனே சிக்கிக்கொண்டார். ஒரு கட்டத்தில், இந்திய உச்சநீதிமன்ற உத்திரவின்பேரில் ஸ்ரீனிவாசன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்தே தற்காலிகமாக விலக நேர்ந்தது.

குருநாத் மெய்யப்பன் 

இப்போதோ அவர் அகில உலக கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவராகவே ஆகிவிட்டார், என்னய்யா சுப்ரீம் கோர்ட் ஜூஜூபி என்கிறார் அவர்.

அவரைப் பற்றிய சில செய்திக்குறிப்புக்கள்



எத்தனை ஊழல் புகார் வந்தாலும் அசராமல் உடும்புப் பிடியாய் பதவிகளைத் தக்கவைத்துக்கொள்வதில் ஸ்ரீனிவாசனுக்கு இணை ஸ்ரீனிவாசன்தான்.
டைம்ஸ் ஆஃப் இண்டியா ஆங்கில நாளேடு வளைத்து வளைத்து அவரைத் தாக்கி எழுதியது


ஆனால் இறுதியில் இவர்களே வாலைக் குழைத்துக்கொண்டு சென்று அவர் முன் மண்டியிட்டு  டைம்ஸ் நௌ


டைம்ஸ் ஆஃப் இண்டியா


என மானாவாரியாகப் பேட்டிகள்.

இப்படி உச்சநீதிமன்றம், பெரும் மீடியாக் குழுமங்களையே அசரவைக்கும் ஆற்றல் படைத்த ஸ்ரீனிவாசனுக்கு தமிழக அரசு எம்மாத்திரம்?



அவர் திமுக தலைவர் கருணாநிதிக்கு நெருக்கம் என்பது மட்டுமே பலருக்குத் தெரியும். ஆனால் ஜெயலலிதா உட்பட அனைத்து அரசியல் புள்ளிகளும் அவரது கோட் பைக்குள் என்றால் மிகையாகாது.

வேட்டி பிரச்சினையில் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் வண்ணம் முழங்கிய புரட்சித் தலைவி பல கோடிக்கணக்கான ரூபாய்களை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தாரை வார்த்திருக்கும் கதையைத் தான் நீங்கள் இப்போது படிக்கவிருக்கிறீர்கள்.

கட்டுமரம், ஜெஜெ என முதல்வர் மாறினாலும் கிரிக்கெட் முதலைகளின் ஆதிக்கம் தொடர்கிறது, இன்னமும் வலுப்பெறுகிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 1860ம் ஆண்டு, கூட்டுறவு பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கம். 1 மே 1953 அன்று இச்சங்கம் பதிவு செய்யப்பட்டது. 



இச்சங்க பதிவு ஆவணங்களின்படி, இதன் நோக்கம், தமிழகத்தில் கிரிக்கெட்டை கட்டுப்படுத்துவது, கிரிக்கெட் தொடர்பான முடிவுகளை எடுப்பது, கிரிக்கெட் விளையாட்டை பரப்புவது, கிரிக்கெட் ஆட்டங்களை நடத்துவது, கிரிக்கெட் விளையாட்டின் நலனை உயர்த்துவது ஆகியன.   இந்த சங்கத்தின் பயன்கள், சாதி, இன, பாலின மற்றும் மொழி பாகுபாடு இன்றி அனைத்து பொதுமக்களுக்கும் பயன்படும்.

இந்த அடிப்படையில்தான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் சென்னை கிரிக்கெட் கிளப் ஆகிய இரண்டு அமைப்புக்களுக்கும் சேர்த்து 1965ம் ஆண்டு முதல், தற்போது உள்ள சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் குத்தகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.  இந்த இடத்தின் மொத்த அளவு 12 ஏக்கர் 23 கிரவுண்டுகள் மற்றும் 2053 சதுர அடி ஆகும்.



இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ஒருவர், "அறுபதுகளின் தொடக்கத்தில் முதலமைச்சராக இருந்த காமராஜருக்கு, மகளிருக்காகவே வெள்ளையர்களால் கட்டப்பட்ட கோஷா மருத்துவமனை என்ற கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கனவு இருந்தது.   பெருகிக் கொண்டு போகும் இந்த மக்கள் தொகைக்கு ஈடு செய்யும் வகையில், ஆசியாவிலேயே பெரிய மருத்துமனையாக கோஷா மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தார்.  கோஷா மருத்துவமனையின் பின்புறம் இருந்த 12 ஏக்கர் நிலத்திலும், மிகப்பெரிய மருத்துவமனை கட்ட வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது.

அவருக்கு பின் முதலமைச்சராக இருந்த பக்தவச்சலமும் காமராஜரின் திட்டத்தை நிறைவேற்ற முனைந்தார்.  அந்த நேரத்தில், கிரிக்கெட் விளையாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக வைத்திருந்த பார்ப்பனர்கள், காமராஜரை அணுகி, வெள்ளைக்காரனின் விளையாட்டை நாம் விளையாடினால்தான் அவர்களுக்கு நிகராக நாம் வளர முடியும். அவ்வாறு அவர்களுக்கு நிகராக வளர, இந்த இடத்தை ஒதுக்கினால், உலகத்தரத்தில் ஒரு மைதானம் அமைத்து, கிரிக்கெட் பயிற்சி அளிக்கலாம் என்றனர்.

அவர்களை நம்பிய காமராஜரும், பக்தவச்சலத்திடம், இந்த நிலத்தை அவர்களுக்கு ஒதுக்கித் தரும்படி கூறியதன் அடிப்படையிலேயே அந்த இடம் ஒதுக்கப்பட்டது.  ஆனால், அப்படி விளையாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இன்று மது விடுதி நடத்தி, அரை குறை ஆடைகளில் மகளிரை ஆட விட்டு வேடிக்கை பார்க்கின்றனர்" என்று வேதனைப்பட்டார் 

அரசு நிலங்களை அரசு நிலங்களை வணிகமல்லாத நோக்கத்துக்கு வழங்க வேண்டுமென்றால் அந்த நிலத்தின் சந்தை மதிப்பில் ஏழு சதவிகிதத்தை ஆண்டொன்றுக்கு குத்தகைத்தொகையாக செலுத்த வேண்டும். 

1965ம் ஆண்டு முதல், குத்தகை தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.  அந்த அடிப்படையில், சராசரியாக ஆண்டுக்கு ரூ 50 ஆயிரம் என்ற அளவில் 06.06.1995 நாளிட்ட அரசாணை எண் 512 மூலமாக, தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் மற்றும், சென்னை கிரிக்கெட் கிளப்புக்கு குத்தகை புதுப்பிக்கப்படுகிறது.   இந்த குத்தகையின் படி, 20.04.1995 முதல் 19.04.2015 வரை, 20 ஆண்டுகளுக்கு இந்த அரசு இடம் கிரிக்கெட்டுக்காக இரண்டு அமைப்புகளுக்கும் வழங்கப்படுகிறது. 



குத்தகைத் தொகை 20.04.1995 அன்று உள்ளபடி, ரூபாய் 50 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டு குத்தகை புதுப்பிக்கப்படுகிறது.   அந்த அரசாணை "இந்த குத்தகை தொகை முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நடப்பில் இருக்கும் என்றும், அதன் பின்னர் மறுபரிசீலனை செய்யப்படும் என்ற சிறப்பு நிபந்தனையின் கீழ் புதுப்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கிறது.   

அதன்படி குத்தகைத் தொகை எப்போது மறு பரிசீலனை செய்யப்பட்டிருக்க வேண்டும் ? 19.04.2000ல்.   குத்தகையை 20 ஆண்டுகளுக்கு  நீடித்தது ஜெயலலிதா.  குத்தகையைத் தொகையை 2000ம் ஆண்டில் மறுபரிசீலனை செய்திருக்க வேண்டியது கருணாநிதி. 

மீண்டும் 2005ம் ஆண்டில் குத்தகைத் தொகையை மறுபரிசீலனை செய்திருக்க வேண்டியது ஜெயலலிதா.    2010ல் மீண்டும் ஆட்சியில் இருந்தது கருணாநிதி. 
ஆனால், இன்று வரை, இந்த குத்தகைத் தொகை மறுபரிசீலனை செய்யப்படவேயில்லை.  1993ம் ஆண்டு முதல் 2014 வரை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எவ்வளவு சம்பாதித்திருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.  

ஆனால், "நான் இருக்கும் வரை வேட்டி இருக்கும்"  என்று வீர முழக்கமிடும் ஜெயலலிதாவுக்கோ, "அய்யகோ... வேட்டிக்கு அவமானமா..... " என்று அரற்றும் கருணாநிதிக்கோ, அரசு நிலத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்களே... அதற்கான வாடகையையாவது குறைந்தபட்சம் மறுபரிசீலனை செய்து உயர்த்த வேண்டும் என்று துளியும் அக்கறை இல்லை.

சரி.   இப்படி மலிவான விலையில் அரசு நிலத்தை கையகப்படுத்தி வைத்திருக்கும் கிரிக்கெட் சங்கத்தினர், அரசுக்கு வருமான வரியாவது ஒழுங்காக செலுத்துகிறார்களா ? அதுவும் கிடையாது.  

2003ம் ஆண்டு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வருமான வரிச்சட்டம் 1961 பிரிவு 12AAன்படி, வருமான வரித்துறையில் பதிவு செய்து கொள்கிறது.  பரோபகார பணிகளில் (Charitable purposes) ஈடுபடும் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளிக்கும் பிரிவு இது.   1984ம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு சுற்றறிக்கையின்படி,

“ ‘charitable purpose’ includes relief of the poor, education, medical relief and the advancement of any other object of general public utility.”

பரோபகார பணிகள் என்றால், ஏழைகளுக்கு உதவுவது, கல்விக்கு உதவுவது, மருத்துவ உதவிகள் செய்வது மற்றும் பொது நன்மைக்கான விஷயங்களில் ஈடுபடுவது. 

இந்தப் பிரிவில் உள்ள "any other object of general public utility" என்பதற்கான புதிய விளக்கம் 01.04.2009ம் ஆண்டு ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் கொண்டு வரப்படுகிறது. அந்த திருத்தத்தின்படி, வியாபாரம், வணிகம், தொழில் அல்லது இது தொடர்பான பணிகளில் ஈடுபடுவது, பொது நன்மைக்கான பணிகளில் அடங்காது என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.  

இந்த புதிய விளக்கத்தை அடுத்து, வருமான வரித்துறை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை வரி கட்டுமாறும், பரோபகார பணிகளில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஈடுபடுகிறதா என்று வருமானவரித் துறை விரிவான ஆய்வை மேற்கொள்கிறது.

ஆய்வின் இறுதியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பரோபகார பணிகள் எதையும் மேற்கொள்ளவில்லை, மாறாக வியாபாரத்தில் மட்டுமே ஈடுபடுகிறது என்று முடிவெடுத்து, பரோபகாரப் பணிகளின் கீழ் இருந்த விதிவிலக்கை என்ற பதிவை ரத்து செய்து உத்தரவிடுகிறது.  இதை எதிர்த்து வருமான வரித்துறை மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கிறது கிரிக்கெட் சங்கம்.

மேல் முறையீட்டின் போது, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு அளித்த 26 கோடி ரூபாயை வருமானமாக கருதக்கூடாது, மாறாக அது கிரிக்கெட் வளர்ச்சிக்காக அளிக்கப்பட்ட மான்யம் என்றும், வேறு பல காரணங்களையும் முன்வைக்கிறார்கள்.

வருமான வரித்துறையின் சார்பில், 'தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், போட்டிகள் நடக்கும் சமயங்களில் டிக்கெட் விற்பனை மூலமாக கணிசமான லாபத்தை சம்பாதிக்கிறது, ஐபிஎல் ஆட்டங்களிலும் ஏராளமான வருமானம் வருகிறது.  இது தவிரவும் விளம்பரங்களின் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது,’ என்று வாதிட்டனர். 



எந்தெந்த மாநிலங்களில் போட்டி நடைபெறுகிதோ, அந்தந்த  மாநிலங்களின் கிரிக்கெட் சங்கத்துக்கு, மத்திய கிரிக்கெட் வாரியம், பங்கு பிரித்துத் தருகிறது.
தவிரவும் பெரும்பாலான வருமானம், விளம்பரம் மூலமாகவும், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விற்பதன் மூலமாகவும் வருகிறது.   

ஐபிஎல் என்ற விளையாட்டே முழுக்க முழுக்க வியாபாரம்.  அதில் விளையாடும் வீரர்கள் ஏலம் எடுக்கப்படுகிறார்கள்.  அந்த அணிகள் பல கோடிகள் கொடுத்து வீரர்களை வாங்குகின்றன.  மேலும் வருவாயை பெருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக, விளையாட்டைத் தவிர்த்து மற்ற பல வேலைகளிலும் இச்சங்கம் ஈடுபடுகிறது, விளையாட்டை வளர்ப்பதற்காக என்று தொடங்கப்பட்ட இந்த சங்கம், அந்தப் பணிகளைத் தவிர மற்ற எல்லாப் பணிகளையும் செய்கிறது என்று இடித்துரைத்த வருமானவரித் துறை, ஐபிஎல் அழகிகள் ஆட்டத்தை எடுத்துக்காட்டாகவும் கூறுகிறது.  

2008-2009ம் ஆண்டில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் மொத்த வருமானம் ரூ 34.25 கோடி.  இதில் ரூ 26.82 கோடி, இந்திய கிரிக்கெட் சங்கம் வழங்கியது.    இதில் ஐபிஎல் நடத்தியதற்காக வழங்கப்பட்ட ரூ 10 கோடியும் அடக்கம்.  ஐபிஎல் 1 நடத்தியதில் கிடைத்த லாபம் ரூ 2.90 கோடி.   அந்த ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வட்டியாக பெற்ற தொகை மட்டும் ரூ 3.47 கோடி.
இந்த வழக்கில் தீர்ப்பளித்த தீர்ப்பாயம் -

"ஐபிஎல் ஆட்டங்கள் வெறும் வணிகமே என்பதில் சந்தேகம் இல்லை.   ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் மிகப்பெரும் தொழில் அதிபர்களாகவும், சினிமா நட்சத்திரங்களாகவும் உள்ளனர். அவர்கள் ஏலத்தின் மூலம் வீரர்களை வாங்குகின்றனர். சிறந்த வீரருக்கு அதிகபட்ச விலை தரப்படுகிறது.  ஒவ்வொரு அணியும், சிறந்த வீரரை அதிக விலை கொடுத்து வாங்குகிறது.  இந்த அணிகளில் முதலீடு செய்யும், உரிமையாளர்கள், விளம்பரங்கள் மூலமாகவே தங்கள் மூலதனத்தை மீட்டு எடுக்கிறார்கள்.  ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறுவதே, முதலீட்டாளர்கள் லாபத்தை அறுவடை செய்வதற்காகத்தான்.  ஐபிஎல் விளையாட்டு, பொது நன்மைக்கான பரோபகாரம் என்பதை எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.  ஐபிஎல் விளையாட்டு, பெரும் பணம் புழங்கும் விளையாட்டு.  இன்னும் சொல்லப்போனால், திரைத்துறையைப் போல, அது ஒரு பொழுதுபோக்குத் தொழில். 

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஐபிஎல் ஆட்டங்களைத் தவிரவும், நட்சத்திர கிரிக்கெட் நடத்துகிறது.   அதில் திரை நட்சத்திரங்கள் பங்கு பெறுகிறார்கள். இந்த நட்சத்திர கிரிக்கெட்டில் எந்த பொது நன்மையும் இல்லை.   இந்த நடவடிக்கைகள் எல்லாமே, புகழுக்காகவும் பணத்துக்காகவும் நடத்தப்படுவதே. 

வெளிப்படையாக சொன்னால், சிறு வட்டித் தொகை மற்றும் வாடகையை தவிர்த்தால் பெரும்பாலான வருமானம் விளம்பரம் மூலமாக மட்டுமே வருகிறது.    இந்த ஆட்டங்களுக்கான டிக்கெட் விலை மிக மிக அதிகம்.  சாதாரண குடிமகன் டிக்கெட் வாங்கி ஆட்டத்தை பார்ப்பதை நினைத்துப் பார்க்க முடியாத விலையில் விற்கப்படுகிறது.  பொது நன்மை என்பதை, ஏழை மக்களை ஒதுக்கி விட்டு பார்க்க முடியாது.  

பொது நன்மை என்று கூறுகிறீர்களே இந்த கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை சேரிகளில் வாழும் ஏழை மக்களுக்கு வழங்கினீர்களா என்று கேட்டதற்கு, அவர்களுக்கு வழங்குவதில்லை.  ஆனால், சமுதாயத்தின் மிக முக்கிய பிரமுகர்களுக்கு, உரிய வரியை செலுத்திய பிறகு இலவசமாக டிக்கெட் வழங்குகிறோம் என்று பதில் கூறினர். இந்த பதிலில் இருந்து, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயல்பாடு, பொது நன்மைக்கானது இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.


இன்னும் சொல்லப்போனால், அதிக லாபம் சம்பாதிக்க வேண்டுமென்பதற்காக, சியர் லீடர்கள் என்று கூறப்படும் பெண்களை ஆடவைத்து அதிக விளம்பரப்படுத்தி லாபம் சம்பாதிக்கிறது இச்சங்கம்." என்று கூறிய தீர்ப்பாயம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை வரி செலுத்துமாறும், எந்த சலுகையும் கிடையாது" என்றும் உத்தரவிடுகிறது.

இத்தீர்ப்பின் மூலம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்துக்காக செயல்படவில்லை என்பதும், இதன் செயல்பாடுகள் வணிக நோக்கத்திலேயே என்பதும் தெளிவாக்கப்பட்டுள்ளது. 

அதன்பிறகாவது தமிழக அரசு குத்தகையை மறுபரிசீலனை செய்து, வாடகையை உயர்த்த வேண்டுமா இல்லையா ?  இல்லையே. 2008-2009ம் ஆண்டில் வட்டியாக மட்டும் 2.90 கோடியை சம்பாதித்த ஒரு சங்கத்துக்கு, 12 ஏக்கர்களை வருடத்துக்கு 50 ஆயிரம் வாடகைக்கு வழங்கும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் எப்படிப்பட்டவர்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

அரசு நிலங்களை குத்தகைக்கு வழங்குவது குறித்த விதிகள், வருவாய் நிலை ஆணை 24A ல் கூறப்பட்டுள்ளது.  அதன்படி, வணிக நோக்கத்துக்காக இருந்தால் 14 சதவிகிதமும், வணிகமல்லாத நோக்கத்துக்கா இருந்தால் 7 சதவிகிதமும் குத்தகை தொகை வசூலிக்கப்பட வேண்டும் என்றும் அவ்விதி கூறுகிறது.   இந்த விதிகளெல்லாம் வருவாய்த் துறையில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரியாதா ?      அல்லது வருவாய் அமைச்சருக்கு   தெரியாதா  ?  அல்லது   ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும்தான்    தெரியாதா ?

வருவாய் நிலை ஆணை

அமெரிக்க துணைத் தூதரகத்தின் சார்பில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் சர்வதேச பள்ளி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது.  இந்தப் பள்ளிக்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியது.  இந்த நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட மொத்த பரப்பு  12.42 ஏக்கர்கள்.   முழுவதும் ஒரே இடத்தில் இல்லை.  சென்னை, மயிலாப்பூர், கொட்டிவாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் என வெவ்வேறு இடங்களில் உள்ளது.   அவ்வாறு பிரித்துப் பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஆண்டு குத்தகைத் தொகை எவ்வளவு தெரியுமா ?  ரூ 16.25 லட்சம்.  

2000ம் ஆண்டு ஒரு லட்சம் ரூபாயாகவிருந்த குத்தகைத் தொகை,  2005ம் ஆண்டு முதல் 1 லட்சத்து 25 லட்சமாக உயர்த்தப்பட்டது. 

அமெரிக்க நிறுவனத்துக்கு நிலம் வழங்கப்பட்ட அரசாணை

இந்த நிறுவனத்துக்கு இல்லாத சலுகை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு எதற்காக ?   

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிககள் யார் தெரியுமா ?  தலைவர் என்.சீனிவாசன்.  துணைத்தலைவர்கள் கல்பாத்தி எஸ்.அகோரம், யு.பிரபாகர் ராவ், எஸ்.ராகவன், மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்.

இதில் யு.பிரபாகர் ராவ் மற்றும் எஸ்.ராகவன் ஆகியோர் யாரென்று தெரியாது. கல்பாத்தி எஸ்.அகோரம் திரைப்படத் தயாரிப்பாளர்.   பி.எஸ்.ராமன் வழக்கறிஞர்.  இவர்களுக்கும் கிரிக்கெட்டுக்கும் என்ன தொடர்பு ?



ஆனால், இப்படி ஒரு சங்கர மடம் போலத்தான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தப்பட்டு வருகிறது என்பது முகத்தில் அறையும் உண்மை. 

உச்சநீதிமன்றமே, கிரிக்கெட் லாபியிடம் மண்டியிடும் அளவுக்கு கிரிக்கெட் மாஃபியா இன்று அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராகவும் இருந்துகொண்டு உள்ள ஒரு நபர், அந்த வாரியமே நடத்தும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளும் ஒரு அணியின் உரிமையாளராக இருப்பது ஒரு மிகப்பெரிய மோசடி என்பது குழந்தைக்குக் கூட தெரியும். இதை எதிர்த்து ஏ.சி முத்தையா வழக்கு தொடர்ந்தார்.  அந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜேஎம்.பன்சால் மற்றும் கியான் சுதா மிஷ்ரா ஆகியோர் விசாரித்தனர்.    நீதிபதி பன்சால், சீனிவாசன் தலைவராக தொடர்வதில் தவறே இல்லை என்று தீர்ப்பு எழுதினார்.  க்யான் சுதா மிஷ்ரா, தவறு என்று எழுதினார்.  இதையடுத்து, இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. இது நடந்தது செப்டம்பர் 2011.   ஆனால், இன்று வரை அந்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வழக்கை விசாரிக்கவே தொடங்கவில்லை.



என்.சீனிவாசனின் மருமகன் ஐபிஎல் போட்டிகளில் பெட்டிங்கில் ஈடுபட்டு சிக்கியபோதே, தார்மீக அடிப்படையில் சீனிவாசன் பதவி விலகியிருக்க வேண்டும்.  ஆனால், சற்றும் கூச்ச நாச்சமில்லாமல், பதவியில் தொடர்கிறார் சீனிவாசன்.   அதன் பிறகும், அவர் தொடரக்கூடாது, அவர் உரிமை வகிக்கும் அணி மீது பெட்டிங் புகார்கள் இருக்கின்றன என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுகிறது.  உச்சநீதிமன்றம், ஐபிஎல் போட்டிகளுக்கு மட்டும் வேறு தலைவர் என்று சுனில் கவாஸ்கரை தலைவராக நியமித்து ஒரு வினோதமான தீர்ப்பை வழங்குகிறது.

ஆனால், இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நபரான சீனிவாசன், சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவராகிறார்.  ராய்ட்டர்ஸ், பிபிசி போன்ற ஊடகங்களின் விளையாட்டு நிருபர்களிடம், என்னை பற்றி எழுதினால், இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களை நீங்கள் பார்க்க அனுமதி மறுப்பேன் என்கிறார்.  அந்த அளவுக்கு அகங்காரத்தோடு நடந்து கொள்கிறார். இந்த மோசடியை உச்சநீதிமன்றமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றால், கிரிக்கெட் எத்தகைய விஸ்வரூப வளர்ச்சி எடுத்து, அரசியல், அதிகாரம் மற்றும் நீதித்துறையையே ஆட்டி வைக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

என்.சீனிவாசனோடு, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை விவாதிக்கிறார். உயர்நீதிமன்ற நீதிபதிகளோ, சீனிவாசனை பகைத்துக் கொண்டால், கிரிக்கெட் போட்டிகளுக்கு இலவச பாஸ் கிடைக்காது என்பது போன்ற அற்ப காரணங்களுக்காக, சீனிவாசனை மயிலிறகால் வருடிக் கொடுக்கின்றனர். 

எனவேயே 500 ஆண்டுகளானாலும் சேப்பாக்கம் மைதான குத்தகைத் தொகை உயர்த்தப்படப்போவதில்லை, என்ன வருமானம், யார் அனுபவிக்கிறார்கள் என்ற கேள்விமுறையெல்லாம் கிடையாது. விஐபிகளுக்குத் தொடர்ந்து பாஸ் கிடைத்துக்கொண்டிருக்கும், மானாட மயிலாடவுக்கு ஒரு மாற்றாக சியர் லீடர்சை அனைவரும் கண்டு களிக்கலாம்.

இப்பிரச்சினை தொடர்பான ஆவணங்களனைத்தையும் அளித்தும், எந்த பத்திரிகையும் இச் செய்தியினை வெளியிட முன்வரவில்லை. இந்நிலையில் எங்களாலியன்றது தமிழ்கூறு நல்லுலகுக்கு.

என் ஸ்ரீனிவாசன் அவர்களே உங்களுக்குக் கோபம் வந்தால் அது நியாயமானதே. இந்திய கிரிக்கெட்டின் மாண்பினை உலகெங்கும் எடுத்துச் செல்கிறீர்கள் என்பதால் எங்களுக்கும் தமிழன் என்ற முறையில் பெருமைதானே, பாசம்தானே. கட்டுமர விசுவாசத்தில் ஓரளவாவது எங்களுக்கிருக்க வேண்டாமா?


எனவே அறச்சினத்தில் கட்டுரை எழுதிவிட்டோம். ஆனால் உங்களுக்கு உதவவேண்டுமெனவும் நினைக்கிறோம். நீங்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ளவேண்டிய நபர் மேதகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம்.
எப்படியாவது சவுக்கை ஒழித்துவிடவேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார். இதுவரை அந்த உயரிய நோக்கம் நிறைவேறவில்லை. உங்களுக்குத் தான் எல்லா வழிகளும் தெரியுமே.

நீங்கள் இருவரும் இயற்கையான கூட்டாளிகள். எனவே ஒன்று சேர்ந்து, ஆலோசித்து சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்யுங்கள்.

கட்டுரையையும், இந்தத் தளத்தையும் தடை செய்ய நீங்கள் அணுக வேண்டிய முகவரி.  சவுக்கு தொடர்பான அனைத்து கட்டப்பஞ்சாயத்துகளையும் கவனிப்பவர் இவர் ஒருவரே. 

சிரில் தாமரைச் செல்வம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதிபதி
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை 600 104

பின்னால் உள்ள படத்தில், Law என்ற வார்தை தவறுதலாக வந்துள்ளது.

கருணாநிதி ஒரு நேர்மையாளர்.

நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்கள், தன்னுடைய இளையதளத்தில், கருணாநிதியின் சொத்துக்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பியிருந்தார். 




அந்த கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை விட்டு, பதில் கேள்வி கேட்டுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. 

மார்கண்டேய கட்ஜுவின் அறிக்கைக்கு
கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்!

திரு.மார்கண்டேய கட்ஜு அவர்கள், கழகத் தலைவர் கலைஞர் அவர்களை, தனிநபர் விமர்சனமாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விகளைக் கேட்பதற்கு முன்பு, இந்தக் கேள்விகளை கேட்க திரு.கட்ஜுக்கு எள் முனையளவாவது தகுதி உண்டா? என்று நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பொது அமைப்பான நீதிமன்றத்தின் நீதிபதியாய் இருந்து ஓய்வு பெற்று, இன்று பத்திரிக்கை சுதந்திரத்தையும், உண்மைத் தன்மையும் காக்க வேண்டிய இடத்தில் இருந்துகொண்டு, வருணாசிரம தர்மத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரித்து பாகுபாடு பார்த்து அவதூறு சேற்றைக் கொண்டு தனிநபர் தாக்குதலில் நீங்கள் ஈடுபடலாமா ?



கழகத் தலைவர் கலைஞர் அவர்கள், "நீதிபதியின் பதவி குறித்து எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என்று தாங்கள் கூறிய கருத்தை விவாதப்பொருளாக ஆக்க விரும்பவில்லை" என்று கூறியதற்குக் காரணம் - நீங்கள் வகித்த மேன்மைதங்கிய பொறுப்புகளே ஆகும். ஆனால் அந்த மேன்மைதங்கிய பொறுப்புகளில் இவ்வளவு கீழ்த்தரமான சிந்தனை கொண்ட ஒரு மனிதர் இருந்துள்ளார் என்று நினைக்கும்பொழுது உள்ளபடியே வெட்கப்படுகிறோம்.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரை, தமிழினத்தின் பாதுகாவலரை, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் அரணாய் விளங்கும், தலைவர் கலைஞரைப் பார்த்து கேள்வி கேட்கும் நீங்கள் உங்கள் வீட்டுக் கண்ணாடி முன் நின்று நீங்கள் கேட்ட கேள்விகளை உங்களுக்கு பொருத்திப் பாருங்கள்.

தி.மு.கழகமும், அதன் தலைமையும் தெளிவாக தங்கள் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த பின்பும், திரும்பத் திரும்ப கழகத் தலைவர் குறித்த தனிமனித தாக்குதலை ஒருபொழுதும் அனுமதிக்க முடியாது. தனக்கு கோபாலபுரம் இல்லத்தைத் தவிர வேறு சொத்துகள் இல்லை என்றும், தன் காலத்துக்கு பிறகு தன் குடும்பத்தாரின் ஒப்புதலோடு அதனை பொதுமருத்துவமனையாக மாற்ற விருப்பம் தெரிவித்து அதனை மக்களுக்கு எழுதி வைத்து விட்டேன் என்று பதில் கூறியதற்கு பின்னரும், இப்படி தனிநபர் தாக்குதலை தொடுப்பது தரமற்ற, உள்நோக்க செயல். நீங்கள் கேட்டுள்ள எல்லாக் கேள்விகளுக்கும், வருமான வரித்துறை தெளிவான பதிலையும் விளக்கத்தையும் தரும் என்ற அளவோடு, நீங்கள் குற்றம்சாட்டியுள்ள தலைவரின் பிள்ளைகள், பொது வாழ்வில் சிறப்போடு  செயல்பட்டு வரும் நபர்கள். அவர்கள் வருடந்தோறும் வருமான வரி செலுத்தி, அவர்களுக்கான வரும் வருமானத்திற்கான வரியை மிக சரியான நேரத்தில் செலுத்தி, ஒரு நல்ல குடிமகன்களாக செயல்பட்டு வருகின்றனர்.

ஒரு ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பொது வாழ்வில் உள்ள தலைவர்கள் மீது இப்படி அடிப்படை அறிவு கூட இல்லாமல் தனிநபர் தாக்குதலில் ஈடுபவது ஏன் ?

மீண்டும் மீண்டும் தலைவர் கலைஞர், "தங்களின் கருத்தை விவாதப் பொருளாக மாற்ற வேண்டாம்" என்று கூறியதற்குப் பிறகும் நீங்கள் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவது எதற்காக? உங்களை தூண்டிய சக்தி எது? அதற்காக நிர்ணயிக்கப்பட்ட விலை என்ன?

1) தாங்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபொழுது உங்கள் மீது வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளுக்கு இன்னமும் பதில் கூற முற்படவில்லை.

2) சாதி ரீதியிலான அடக்குமுறை, பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உங்களால் இன்று வரை பதில் கூற முடியவில்லை.

3) நீங்கள் நீதிபதியாக இருந்தபொழுது உங்கள் சொத்துக் கணக்கு என்ன?

4) தற்பொழுது வகித்துவரும் பிரஸ் கவுன்சில் சேர்மன் பொறுப்பில் இருக்கும் தங்களின் சொத்து மதிப்பு என்ன?

5) உங்கள் தாத்தா கைலாஷ்நாத் கட்ஜுவின் சொத்து மதிப்பு என்ன ?

6) உங்கள் தந்தை எஸ்.என். கட்ஜுவின் சொத்து மதிப்பு என்ன ?

7) உங்கள் மனைவி ரூபா அவர்களின் சொத்து மதிப்பு என்ன ?

8) உங்கள் மகள் மற்றும் மருமகனின் சொத்து மதிப்பு என்ன ?

9) உங்கள் மகன் மற்றும் மருமகளின் சொத்து மதிப்பு என்ன ?

10) நீங்கள் சென்னைக்கு அடிக்கடி வந்து போகும் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பண்ணை இல்லத்தின் சொத்து மதிப்பு என்ன ?

11) உங்கள் பண்ணை இல்லத்தில் நடப்பது என்ன? பக்கத்திலேயே வேறு ஒரு பெண்ணுக்கு பண்ணையில்லம் வாங்கிக் கொடுத்ததாக சொல்லப் படுகிறதே! அந்த சொத்தின் மதிப்பு என்ன? தங்களின் அறிக்கைகளின் பின்னணி அந்தப் பெண்தான் என்பது உண்மையா ?

12) நீங்கள் புதுடில்லி நீதிமன்றத்திற்கு சென்றபொழுது சென்னையில் இருந்து ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு போய் வேறு காரணங்கள் சொல்லி அவரை உங்களோடு இரண்டு மாதம் தங்க வைத்ததாக சொல்லப்படுகிறதே !
அதற்கான செலவை யார் செய்தது ? உங்களை ஆட்டிப் படைக்கும் அரசியல் சக்தியா ?

மேலும் உங்கள் மாமா திரு. பி.என்.கட்ஜு அவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்பு அவருக்கு இருந்த சொத்துக்கள் எவ்வளவு? இப்பொழுது உங்கள் குடும்பத்திற்கு உங்கள் மாமா மற்றும் உங்கள் உறவினர் சசிதரூரின் முன்னாள் மனைவியின் குடும்ப சொத்துகள் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? இப்படி பல கேள்விகளை உங்கள் முன் வைக்கிறோம்.

திரு. கட்ஜு அவர்களே நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன ?
தலைவர் கலைஞர் குறித்து தாங்கள் கூறியவற்றை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதற்காக நீங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.
திரும்பத் திரும்ப தலைவர் கலைஞர் அவர்களின் மீது தனிநபர் தாக்குதல் தொடுத்தும் அவதூறு கருத்துகள் பேசியும் வந்தால் உங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கிறேன்.

"அண்ணா அறிவாலயம்" ஆர்.எஸ். பாரதி,
சென்னை - 18. அமைப்புச் செயலாளர்,
நாள் : 11-8-2014. தி.மு.க.

Saturday, August 9, 2014

பேய்கள் அரசாண்டால் ?


முகலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்ததும், அந்த இடத்தை பார்வையிட்ட ஜெயலலிதா, முதலில் சொன்னது "சிஎம்டிஏ அதிகாரிகள் மீது எந்தத் தவறும் இல்லை" என்பதே.   எந்த விதமான விசாரணையும் நடக்கும் முன்னரே இப்படி ஒரு சான்றளிக்கும் முதலமைச்சர் ஆட்சி நடத்தும் மாநிலத்தில் என்ன நடக்காது ?

ஒரு சதுர மீட்டர் கூட அனுமதி பெறாமல் பல ஆயிரம் சதுர அடியில், ஒரு மருத்துவக் கல்லூரியை 5 ஆண்டுகளாக நடத்த முடியுமா ?   முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஏ.என்.ராதாகிருஷ்ணன். முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியின் இணையதளத்தில் அக்கல்லூரியைப் பற்றி இப்படி குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

A public charitable trust called Sri Muthukumaran Educational Trust was founded as early as March 1984 as Thirumathi. R.Gomathy as Chairperson, Mr. A. Radhakrishnan as Managing Trustee and Thirumathi Meenakshiammal as the trust with the sole aim and object of providing education to the poor in the rural areas in the spire of schooling, arts, science, engineering, educational institutions, medical, dental, nursing and other paramedical courses.

In the line of objects the trust has, the following institutions of repute have been established over the years.

A Hospital with 300 beds at present and to be expanded with 850 beds ultimately was established at Chikarayapuram with all laboratories, others investigation and inpatient treatment facilities and it started functioning catering to the medical needs of the area from September 2008. A medical College was established in the year 2009 in the name and style of Sri Muthukumaran Medical College Hospital and Research Institute, at Chikkarayapuram near Mangadu and has been approved by the Authorities to function from 2010-2011.this institute will fall under the category of Telugu Minority Institution.

This Medical College has been approved by the Ministry of Health and Family Welfare, Govt. of India, New Delhi for admission of150 students in the 1st year MBBS from the Academic year 2010-2011 vide letter No. F.No.U12012/822/2008 -Me (P-II) Dated 14th May 2010.

இந்தக் கல்லூரி ஏறக்குறைய 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு முதல் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். 



இது மைனாரிட்டி கல்வி நிலையம் என்பதால், மொத்தம் உள்ள 150 சீட்டுகளில் 75 சீட்டுகள் அரசுக்கு மீதம் உள்ள 75 இடங்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு.   இந்தக் கல்லூரியில் ஒரு எம்பிபிஎஸ் இடம் சராசரியாக 40 முதல் 45 லட்சம் வரை விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதே கல்லூரி நிர்வாகத்துக்கு சொந்தமாக மீனாட்சி மருத்துவக் கல்லூரி என்று மற்றொரு கல்லூரியும் உண்டு.   இதன் உரிமையாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணனின் மகன் கோகுலும் ஒரு மருத்துவர். இந்த கோகுல் 5 ஆண்டு மருத்துவப் படிப்பை பாண்டிச்சேரியில் உள்ள ஒரு கல்லூரியில் மொத்தம் 12 ஆண்டுகள் படித்தார்.   12 ஆண்டுகள் படித்த பொழுது இவர் பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா ?   2, 6, 8 இது போல ஒற்றை இலக்க மதிப்பெண்களை மட்டுமே பெற்றார். 

கோகுல்
ஒரு வழியாக 12 ஆண்டுகள் கழித்து எம்பிபிஎஸ் பாஸ் செய்தார் கோகுல். கோகுல் படித்த பாண்டிச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, தொடங்கப்பட்ட காலத்தில் பாண்டிச்சேரி பல்கலைகழகத்தோடு இணைக்கப்பட்டிருந்தது.  பின்னாளில், அது நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாறியது.  கோகுல் படித்த காலத்தில் அது பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தோடுதான் இருந்தது.   ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி மதிப்பெண் எடுக்கும் கோகுல் எந்த காலத்திலாவது எம்பிபிஎஸ் பாஸ் செய்வாரா ?  அவரை பாஸ் செய்ய வைக்க, கோகுலின் தந்தை ஏ.என்.ராதாகிருஷ்ணன் அணுகிய நபர்தான் ஜலீஸ் அகமது கான் தரீன் என்ற ஜேஏகே தரீன்.  இவர் அப்போது பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்தார்.  தற்போது, க்ரெசன்ட் பொறியியல் கல்லூரியில் இருக்கிறார்.   இவருக்கு கோகுலை பாஸ் செய்ய வைக்க கொடுக்கப்பட்ட தொகை 25 லட்சம் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள். 

பேராசிரியர் ஜேஏகே. தரீன்
துணை வேந்தரின் உதவியோடு மட்டும் எம்.பி.பிஎஸ் பாஸ் செய்து விட முடியுமா ? மற்றவர்களின் உதவி வேண்டாமா ?  பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் பதிவாளராக உள்ள டாக்டர் ஜே.சம்பத் மற்றும் துணைப் பதிவாளர் டாக்டர்.முரளிதாசன் ஆகியோரின் உதவியோடு ஒரு வழியாக பாஸ் செய்து முடித்தார் கோகுல்.  

எம்பிபிஎஸ் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் படிக்கையில் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்ற வேண்டும்.  ஐந்தாம் ஆண்டு படிக்கும் கோகுல், நான் எங்களது கல்லூரியான மீனாட்சி கல்லூரியிலேயே ஹவுஸ் சர்ஜன் பணியாற்றிக் கொள்கிறேன் என்று வந்துவிட்டார்.    ஒரே ஒரு நாள், ஒரே ஒரு நாள் கூட ஒரு பேஷன்டைக் கூட கோகுல் பார்த்தது கிடையாது.    இப்படி இறுதியாண்டு கோகுல் படித்துக் கொண்டிருந்தபோதே, முத்துக் குமரன் மருத்துவக் கல்லூரியின் மேலாண் இயக்குநராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.   இதற்கு மாதந்தோறும் ஐந்து லட்ச ரூபாய் சம்பளம். 

சரி தற்போது கோகுல் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று கேட்பீர்கள். தற்போது கோகுல், மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வருகிறார்.   

கோகுலை பத்து ஆண்டுகள் கழித்து பாஸ் செய்ததற்கு பிரதிபலனாக, துணைப் பதிவாளர் டாக்டர் முரளிதாசனின் மகள் அபிராமி என்பவருக்கு, ஏ.என்.ராதாகிருஷ்ணனின் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் வழங்கப்பட்டது.  இந்தப் பெண் தற்போது இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாள். 

இந்த கோகுல்தான், இந்த ஆண்டு ஜனவரி மாதம், குடி போதையில், ராகவேந்திரா மருத்துவமனையின் உரிமையாளரை நண்பர்களோடு சென்று தாக்கி, மருத்துவமனையை அடித்து நொறுக்கி, காவல்துறையிடமிருந்து தப்பி ஓடி, பின்னர் கைது செய்யப்பட்டவர்.   

அடித்து நொறுக்கப்பட்ட ராகவேந்திரா மருத்துவமனை
ஏ.என்.ராதாகிருஷ்ணன் ஒரு மிகப்பெரிய கல்வித்தந்தை.   1983ம் ஆண்டு முதன் முதலாக ஒரு பாலிடெக்னிக்கை மட்டுமே தொடங்குகிறார்.  கல்வித்தந்தைகளின் வளர்ச்சி எப்படிப்பட்டது என்பதைத்தான் நாம் ஜேப்பியார், ஏ.சி.சண்முகம், ஜெகதரட்சகன் ஆகியோரின் வழியாக பார்க்கிறோமே.  அதே போல அசுர வளர்ச்சி.   அதன் பின் வரிசையாக கல்வி நிலையங்களை தொடங்குகிறார். 

1983-Meenakshi ammal polytechnic college.
1985-Arulmigu Meenakshi Amman college of engineering.
1990-Meenakshi Amman Dental college.
1993-M.G.R. Institute of Hotel management &techmology.
1995-Sri Muthukumaran institute of technology.
1998-Meenakshi Ammal Matriculation Hr.sec.school,
Meenakshi college of Nursing,
Meenakshi college of physiotheraphy.
2001-Meenakshi college of engineering,
Meenakshi ammal Arts and science college,
Sri Muthukumaran Arts and science college.
2002-Vani Vidhyalaya sr.secondary & junior college.
2003-Meenakshi Medical College Hospital & Research institute.
2005-Meenakshi ammal Teacher Training Institute.
2006-Arulmigu Meenakshi college of Education,
Sri Muthukumaran College of Education.
2010-Sri Muthukumaran Medical college Hospital & Research Institute.
2011-Mangadu Public school.
2012-Arulmigu Meenakshi amman public school,
Meenakshi ammal Global school.

எப்படிப்பட்ட கல்வித் தந்தை பார்த்தீர்களா ?  தற்போது இவரது முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரிக்கு, மத்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது.   இதை எதிர்த்து தற்போது நீதிமன்றம் சென்றுள்ளார், இதன் தாளாளர் ஏ.என்.ராதாகிருஷ்ணன். 

ஏ.என்.ராதாகிருஷ்ணன்.
இந்த ஏ.என்.ராதாகிருஷ்ணன், மீனாட்சி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர்.  இவர் காமர்ஸ் டிப்ளமா படித்து விட்டு, ப்ளஸ் டூ மாணவர்களுக்கு தட்டச்சு மற்றும் அக்கவுன்டன்சி வாத்தியாராக இருந்தார்.  இதுதான் இவரது கல்வித் தகுதி.  இந்தப் பல்கலைக்கழகத்தின் தாளாராக இருப்பவர் ஏ.என்.சந்தானம்.  இவர் ராதாகிருஷ்ணனின் சொந்த சகோதரர்.    இவர் ஓய்வு பெற்ற முனிசிபல் கமிஷனர். இவர்களெல்லாம் சேர்ந்துதான் மேலே பட்டியலிடப்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  

தற்போது, இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்ததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் ஏ.என்.ராதாகிருஷ்ணன்.  அதில் முதல் பத்தியிலேயே அவர் குறிப்பிடுவது, முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி, மைனாரிட்டி கல்வி நிலையம் என்ற அடிப்படையில் நடத்தப்படுவது.   மைனாரிட்டி கல்வி நிலையம் என்ற தகுதி எப்படி வருகிறது ?  

1983ம் ஆண்டு, மீனாட்சி அம்மாள் ட்ரஸ்ட் என்ற பெயரில் ஒரு ட்ரஸ்ட் பதிவு செய்யப்படுகிறது.  இந்த ட்ரஸ்ட், தமிழகத்தில் உள்ள தெலுங்கு பேசும் மக்களுக்காக என்று தொடங்கப்படுகிறது.  இந்த ட்ரஸ்டின் பதிவுப்படி, இதன் நோக்கம், இந்து மதத்தை பரப்புவது, கல்வி நிலையங்கள் நடத்துவது, இந்து கலாச்சாரத்தை பரப்புவது ஆகியன.   

பதிவு செய்யப்பட்ட ட்ரஸ்ட் ஆவணம்.
ஏ.என்.ராதாகிருஷ்ணன், 1958ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பள்ளியில் படித்தவர்.  சென்னையைச் சேர்ந்தவர்.  அவர் மனைவியும் சென்னையில் ஆசிரியையாக பணியாற்றியவர்.  இவர்கள் இருவருக்கும் ஒரு வார்த்தை கூட தெலுங்கு பேச வராது.  அப்படி இருக்கையில் இவர்கள் எப்படி தெலுங்கு மைனாரிட்டியாக முடியும் ? 
ராதாகிருஷ்ணனின் எஸ்எஸ்எல்சி சான்றிதழ்

தெலுங்கு மைனாரிட்டி என்ற அடையாளத்தை பெற்றால்தான், அரசின் சலுகைகளை பெற முடியும் என்பதற்காக, 1995ம் ஆண்டு, அசலாக 1983ம் ஆண்டு பதிவு செய்த ட்ரஸ்ட் பத்திரத்தில் திருத்தம் கொண்டு வருகின்றனர்.  அதாவது, தெலுங்கு மக்களுக்காக பாடுபடுவது போல.  இது போன்ற திருத்தங்களை செய்ய, இந்திய சிவில் நடைமுறைச் சட்டப் பிரிவு 92 (3)ன் படி சில விதிமுறைகள் உள்ளன.  அந்த விதிமுறைகளின்படி, நீதிமன்ற உத்தரவின் மூலம் மட்டுமே, ட்ரஸ்டின் அசல் நோக்கங்களை மாற்ற முடியும்.  அப்படி எந்த மாற்றமும், ஏ.என்.ராதாகிருஷ்ணனின் இரு ட்ரஸ்டுகளும் செய்யவில்லை.  ஆனால், தங்கள் வசதிப்படி, தெலுங்கு மைனாரிட்டி ட்ரஸ்ட் என்று மாற்றிக் கொண்டு அரசாங்கத்தின் சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

ஏ.என்.ராதாகிருஷ்ணனின் தந்தையின் பெயர் நடேச பிள்ளை.  நடேச பிள்ளை எப்படி தெலுங்கரானார் என்பது புரியவில்லை.   மைனாரிட்டி கல்வி நிலையங்களுக்கு சலுகைகள் வழங்குவது தொடர்பான சட்டம் கீழ்கண்டவாறு கூறுகிறது. 

(a)  The educational institution should have been established by a member / members of the minority community.

(b) The educational institution should have been established for the benefit of minority (Religious / Linguistic) Community they belong and in furtherance to the objective of the Original Trust deed and

(c) that the educational institution is being administered / maintained by the minority community.

மைனாரிட்டி சமூகத்தை சேராத ஏ.என்.ராதாகிருஷ்ணன் நடத்தும் கல்வி நிலையங்களுக்கு மைனாரிட்டி ஸ்டேட்டஸ் எப்படி வந்தது என்பதே தனி விசாரணைக்குரிய விஷயம். 

இப்படி மைனாரிட்டி ஸ்டேட்டஸ் பெறுவதற்காக, 1995ம் வருடம், காஞ்சிபுரம் மாவட்ட ஆர்டிஓ மூலமாக ஒரு சான்றிதழை பெறுகிறார் ஏ.என்.ராதாகிருஷ்ணன்.   ராதாகிருஷ்ணன், மீனாட்சி அம்மாள்,  மற்றும் கோமதி ஆகியோரின் தாய்மொழி தெலுங்கு என்று ஆர்டிஓ சான்றிதழ் அளிக்கிறார்.  ஒருவரின் தாய்மொழி என்ன என்பது குறித்து, ஆர்டிஓ சான்றிதழ் அளித்தது வரலாற்றிலேயே முதன்முறையாக இருக்கும். இந்த சான்றிதழின் அடிப்படையில்தான், தனது ட்ரஸ்டுகளுக்கு மைனாரிட்டி ஸ்டேட்டஸ் பெறுகிறார் ராதாகிருஷ்ணன். சென்னையில் உள்ள ஒரு ட்ரஸ்ட் உறுப்பினர்களுக்கு, காஞ்சிபுரத்தில் உள்ள ஆர்டிஓ எதற்காக மொழி சான்றிதழ் வழங்குகிறார் என்பதும் வியப்புக்குரிய விஷயம். 

ராதாகிருஷ்ணன் தெலுங்கு மொழி பேசுபவர் என்று ஆர்டிஓ அளித்த சான்றிதழ்

சரி.   முத்துக்குமரன் கல்லூரியையாவது ஒழுங்காக நடத்துகிறாரா என்றால் அதுவும் இல்லை.  ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கென்று, அடிப்படையான சில விதிகள் உண்டு.  அந்த மருத்துவக் கல்லூரிக்கென்று சொந்தமாக இடம் இருக்க வேண்டும்.  அந்த மருத்துவக் கல்லூரியின் கட்டிடங்கள் முறையான அனுமதி பெற்று கட்டப்பட்டிருக்க வேண்டும்.  போதுமான உள்நோயாளிகளுக்கான படுக்கைகள் வேண்டும் என்று பல்வேறு விதிகள் உள்ளன.  

நீல சட்டை அணிந்து உட்கார்ந்திருக்கும் நபர்தான் மூத்த மருத்துவர் கோகுல்
இவற்றில் அடிப்படையான விதி கட்டிடங்கள் முறையாக அனுமதி பெற்று கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பதே.  இந்த விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டிருக்கின்றனவா என்பதை, மருத்துவக் கவுன்சிலின் ஆய்வாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்வார்கள்.  அவர்கள் வருகையில், நோயாளிகள், அல்லது ஆசிரியர்கள் ஆகியவற்றில் ஏதாவது குறை இருந்தால், அனுமதி மறுக்கப்படும்.  

2010ம் ஆண்டு முதல் முத்துக்குமரன் கல்லூரி இயங்கி வருகிறது.  மாணவர்கள் படித்து வருகிறார்கள்.    16 மே 2011 அன்று இந்திய மருத்துவக் கவுன்சிலின் 3 மருத்துவர்கள் அடங்கிய குழு, இந்தக் கல்லூரியை ஆய்வு செய்ய வந்தது.   அப்போது, இந்தக் கல்லூரி அனுமதி பெற்ற கட்டிடத்தில் இயங்குகிறதா என்ற கேள்விக்கு, அந்தப் படிவத்தில் சிஎம்டிஏ உத்தரவு TN/CMDA/HB  2077 dated 2008 என்ற கோப்பில் அனுமதி வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மருத்துவக் கவுன்சில் ஆய்வாளர்களின் படிவம்


அந்த மருத்துவ ஆய்வாளர்களிடம், இது குறித்த ஒரு ஒப்புதல் வரைபடமும் வழங்கப்பட்டுள்ளது.    டிசம்பர் 2009ல், முத்துக்குமரன் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டதா என்று சிஎம்டிஏவுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திக் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, "முத்துக்குமரன் கல்வி நிறுவனத்துக்கு எந்த விதமான அனுமதியும் வழங்கப்படவில்லை" என்று பதில் வழங்கப்பட்டுள்ளது.  சரி 2009ல்தான் அனுமதி இல்லை. அதற்குப் பிறகாவது அனுமதி வழங்கப்பட்டதா என்றால், இன்று வரை அனுமதி பெறப்படவில்லை.  ஆனால் அனுமதி பெறப்படாத இந்தக் கட்டிடத்தில் நான்கு ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரி நடத்தி வருகிறார் ஏ.என்.ராதாகிருஷ்ணன்.  

மருத்துவக் கவுன்சில் ஆய்வாளர்களிடம் வழங்கப்பட்ட போலி ஆவணம்


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சிஎம்டிஏ அளித்த பதில்

சிஎம்டிஏ அதிகாரிகள் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஜெயலலிதா சொன்னார் அல்லவா ?   அந்த சிஎம்டிஏ அதிகாரிகள், 28 ஏப்ரல் 2011 அன்று கல்லூரியை நேரில் ஆய்வு செய்கின்றனர்.   ஆய்வு செய்கையில், கட்டிடம் எவ்வித அனுமதியும் இல்லாமல் கட்டப்பட்டு வருவதை காண்கின்றனர்.  உடனடியாக 9 மே 2011 அன்று, கட்டுமான வேலையை நிறுத்துமாறு, அதுவும் மூன்று நாட்களுக்குள் நிறுத்துமாறு நோட்டீஸ் வழங்கப்படுகிறது.   அதுவும் நோட்டீஸில் எழுதியுள்ளதைப் பார்த்தால் டெர்ரராக இருக்கிறது.   "மூன்று நாட்களுக்குள் கட்டுமானப்பணிகளை நிறுத்தாவிட்டால், உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதோடு, பில்டிங்குக்கு சீல் வைக்கப்படும்.  கட்டுமானப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.   மேலும், உரிமையாளர் மீது வழக்கு தொடுக்கப்படும்".  இந்த ஓப்பனிங் நன்றாகத்தான் உள்ளது.   

வேலையை நிறுத்துமாறு சிஎம்டிஏ அளித்த நோட்டீஸ்
கட்டிடங்களை இடிக்கப் போகிறோம் என்று டெமாலிஷன் நோட்டீஸ் மீண்டும் வழங்கப்படுகிறது.  ஏப்ரல் 2011ல் கட்டுமானத்தை நிறுத்துங்கள் என்று வழங்கப்பட்ட நோட்டீஸ், அதுவும் மூன்று நாட்களுக்குள் கட்டுமானத்தை நிறுத்துங்கள் என்று வழங்கப்பட்ட நோட்டீஸுக்கு அடுத்த நடவடிக்கை சரியாக ஒரு வருடம் கழித்து எடுக்கப்படுகிறது. 

உங்கள் கட்டுமானம் சட்டவிரோதமான கட்டுமானம்.   26.03.2012 அன்று உங்களிடம் கட்டுமான ஒப்புதல் கேட்டு எழுதிய கடிதத்துக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை.   ஆகையால் உடனடியாக மூன்று நாட்களுக்குள் கட்டிடத்தை பழைய நிலைக்கு திருப்பாவிட்டால், கட்டிடம் இடிக்கப்படும்.  இது அனுப்பப்பட்ட நாள் 25.04.2012.  தற்போது முழுமையாக இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன.  இன்னும் அந்தக் கல்லூரி செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.  

கட்டிடத்தை இடிப்பதற்கான நோட்டீஸ்

இதையடுத்து 1 ஆகஸ்ட் 2013 அன்று இந்திய மருத்தவக் கவுன்சில்,  சிஎம்டிஏவுக்கு ஒரு கடிதம் எழுதுகிறது.    அந்தக் கடிதத்தில் முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியின் கட்டிடம் மற்றும் மருத்துவமனை கட்டிடம் ஆகியவை அனுமதி பெறாமல் உள்ளதாகவும், அந்தக் கட்டிடங்களை இடிப்பதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிகிறோம்.   இதன் உண்மை நிலையை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கடிதம் எழுதுகின்றனர். 



இதற்கு என்ன பதில் அளிக்க வேண்டும் ?   கட்டிடத்தை இடிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது உண்மைதான்.   அந்தக் கட்டிடங்கள் இன்னும் அனுமதி பெறவில்லை என்றுதானே எழுதவேண்டும் ?  ஆனால், ஜெயலலிதா, உச்சி முகர்ந்து கொஞ்சிப் பாராட்டிய சிஎம்டிஏ அதிகாரிகள், 4 டிசம்பர் 2013 அன்று, இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு பதில் அனுப்புகிறார்கள்.    அந்த பதிலில், எதுவுமே சொல்லாமல், முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குவது பரிசீலனையில் உள்ளது.   கவுண்டமணி செந்திலை வாழைப்பழம் வாங்கி வரச் சொன்னதற்கு சொன்ன பதில் போல இல்லை ? 

மருத்துவக் கவுன்சிலுக்கு சிஎம்டிஏவின் பதில் கடிதம்
சரி.  இந்த ஊழல் இத்தோடு முடிந்து விட்டதா என்றால் இல்லை. இந்த ஒப்புதல் இல்லாத கட்டிடத்திற்காக, இந்தியன் வங்கியிலிருந்து 130 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார் ஏ.என்.ராதாகிருஷ்ணன்.   அது எப்படி ஒப்புதல் இல்லாத கட்டிடத்துக்கு 130 கோடி கடன் என்கிறீர்களா ?   அதற்கென்று தாராள மனம் படைத்த இந்தியன் வங்கி பொதுமேலாளர் ஒருவர் இருந்தார்.  அவர் பெயர் கே.நடராஜன்.    அவர் எதற்காக ஒப்புதல் இல்லாத கட்டிடத்துக்கு 130 கோடி கடன் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுமே ?  அதற்கான விடை தற்போது நடராஜன் எங்கே இருக்கிறார் என்று தெரிந்து கொண்டீர்கள் என்றால் புரியும். 

டை கட்டிக் கொண்டு இருப்பவர்தான் நடராஜன்.
தற்போது நடராஜன் மீனாட்சி கல்வி குழுமங்களின் இயக்குநர்.  ஓய்வு பெற்ற பிறகு, ராதாகிருஷ்ணனின் கல்விக் குழுமத்துக்கு இயக்குநராகி விட்டார். இதற்கு பெயர்தான் ஆங்கிலத்தில் QUID PRO QUO. 130 கோடி ரூபாய் மக்கள் பணத்தை வாரி ராதாகிருஷ்ணன் போன்ற கல்விக் கொள்ளையனுக்கு கொடுத்து விட்டு, சொகுசாக அதே நிறுவனத்தில் பணியாற்றுகிறார். 


தற்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில், இந்திய மருத்துவக் கவுன்சில் தன் கல்லூரிக்கு 2014-2015 கல்வி ஆண்டுக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் ஏ.என்.ராதாகிருஷ்ணன்.    இந்த வழக்குக்காக இவர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களுள் ஒன்று, மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை எழுதிய கடிதம் ஒன்று.   அந்தக் கடிதம், மத்திய அரசு வழக்கறிஞர் காஜா மொய்தீன் கிஸ்திக்கு எழுதப்பட்டது. 

8 ஜுலை 2014 அன்று எழுதப்பட்ட அந்த கடிதத்தில் ஹாஜா மொய்தீன் கிஸ்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில், முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி தாக்கல் செய்திருக்கும் ரிட் மனு எண் 17154/2014 என்ற மனுவுக்கு மத்திய அரசின் சார்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு எழுதப்பட்ட கடிதம்.   இது ஒரு ரகசிய கடிதம் என்று தாராளமாக சொல்லலாம்.  ஒரு கட்சிக்காரர், தன் வழக்கறிஞருக்கு எழுதும் கடிதம் ADVOCATE CLIENT PRIVILEGE என்ற அடிப்படையில் ரகசியமானதே. இந்தக் கடிதத்தை ராதாகிருஷ்ணன், தான் தாக்கல் செய்துள்ள வழக்கில், ஆவணமாக இணைத்து தாக்கல் செய்துள்ளார்.   

இந்த ரகசிய ஆவணம் எப்படி ராதாகிருஷ்ணன் கைக்கு வந்தது என்பது மற்றொரு சுவையான கதை.    ஹாஜா மொய்தீன் கிஸ்தி என்ற வழக்கறிஞர் மத்திய அரசின் பட்டியலில் உள்ள 60 வழக்கறிஞர்களில் ஒருவர்.   ஆனால், மருத்துவக் கல்லூரிகள் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கும் அத்தனை வழக்குகளையும் எடுத்துப் பார்த்தீர்கள் என்றால், ஹாஜா மொய்தீன் கிஸ்தி மட்டுமே ஆஜராகியிருப்பார்.    மத்திய அரசில் பல்வேறு துறைகள் இருக்கும்.   அந்தத் துறைகள் தொடர்பான வழக்குகள் வருகையில், சென்னையில் உள்ள மத்திய அரசின் சட்டத்துறை அந்த வழக்குகளை பரிசீலித்து, எந்த வழக்கு எந்த மத்திய அரசு வழக்கறிஞருக்கு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்யும்.   

ஹாஜா மொய்தீன் கிஸ்தி (இன்னா ஸ்டைலா கீறாரு பாத்தீங்களா)
ஆனால் ஹாஜா மொய்தீன் கிஸ்தி என்ன செய்வார் தெரியுமா ?  வருமானம் உள்ள வழக்குகள் எதுவென்பதை முன்கூட்டியே நீதிமன்ற அலுவலகம் மூலம் தெரிந்து கொள்வார்.   அந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள், சட்டத் துறைக்கு செல்வதற்கு முன்பாகவே, இவர் அதன் நகல்களை எடுத்துக் கொள்வார்.  வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகையில், இவரே எழுந்து, மத்திய அரசு சார்பாக நான் ஆஜராகிறேன் என்று நோட்டீஸை எடுத்துக் கொள்வார்.   நீதிபதிக்கு எந்த மத்திய அரசு வழக்கறிஞர் நோட்டீஸ் எடுத்துக் கொண்டால் என்ன ?   அவர்கள் உடனே, மத்திய அரசு வழக்கறிஞர் நோட்டீஸ் எடுத்துக் கொண்டார் என்று பதிவு செய்து விடுவார்கள். 

ஹாஜா மொய்தீன் கிஸ்தி அடுத்ததாக என்ன செய்வார் தெரியுமா ? சம்பந்தப்பட்ட மத்திய அரசுத் துறைக்கு, நீதிமன்றம் என்னை இந்த வழக்கில் ஆஜராகச் சொல்லி உத்தரவிட்டுள்ளது.  அதனால், இது தொடர்பான அதிகாரியை என்னை வந்து சந்திக்கச் சொல்லுங்கள் என்று கூறுவார்.    

ஹாஜா மொய்தீன் கிஸ்தி 2013ல் ஆஜரான வழக்குகளில் சில

மத்திய அரசின் சட்டத்துறை நியமிக்காமல் இவராகவே ஆஜராவாதால், இவர் ஆஜராவதற்கான கட்டணம், மத்திய அரசிலிருந்து வராது.   ஆனால், அதைப் பற்றி துளியும் கவலைப்படாமல், தானாக முன்வந்து, மத்திய அரசின் அனைத்து வழக்குகளிலும் ஆஜராவார் ஹாஜா மொய்தீன் கிஸ்தி.  இப்படி ஒரு சேவை மனப்பான்மை உள்ள வழக்கறிஞரா என்று உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.  

ஏன் என்று பார்ப்போம். ஹாஜா மொய்தீன் கிஸ்தி, மத்திய கப்பல் துறை தொடர்பான அனைத்து வழக்குகளிலும் ஆஜராவார். கிட்டத்தட்ட கப்பல்துறைக்கு அவர் மட்டுமே வழக்கறிஞர் என்பது போல, எல்லா வழக்குகளிலும், அவர்தான் ஆஜராவார்.   ஏன் கப்பல் மற்றும் மருத்துவக் கல்லூரி வழக்குகளில் ஆஜராவதில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார் என்றால், இந்த வழக்குகளில்தான் பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும்.  பணம் கோடிகளில் கொட்டும். 

இப்படி கோடிகளில் பணம் சம்பாதித்தால்தானே, நீதிபதி தனபாலன் போன்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்கையில், அதன் செலவுகளை ஏற்றுக் கொள்ள முடியும் ?    இப்போது புரிகிறதா ?

சரி.  முத்துக்குமரன் கல்லூரி வழக்கு இவரிடம் எப்படி வந்தது.  மத்திய அரசு இவருக்கு எழுதிய கடிதம், கல்லூரி உரிமையாளரிடம் எப்படி சென்றது என்பது, இன்னொரு கிளைக் கதை.   

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர் டாக்டர் விஜயன் என்பவர்.    இவரை ஊழல் பெருச்சாளி என்று சொன்னால் அது மிகையாகாது. இவர் மீது, சிபிஐ சொத்துக் குவிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.     இந்த விஜயனும், முத்துக் குமரன் மருத்துவக் கல்லூரி நிறுவனர் ஏ.என்.ராதாகிருஷ்ணனும் சம்பந்திகள்.   ராதாகிருஷ்ணனின் மகன் கோகுலுக்கு, விஜயனின் மகளை திருமணம் செய்து வைத்திருக்கிறார். 

டாக்டர் விஜயன்.
இந்த விஜயனும், ஹாஜா மொய்தீன் கிஸ்தியும் நெருங்கிய நண்பர்கள்.   ஒரு நாளைக்கு பல முறை தொலைபேசிகளில் பேசிக் கொள்ளும் அளவுக்கு நெருங்கிய நண்பர்கள்.  சம்பந்தியின் மருத்துவக் கல்லூரிக்கு ஒரு பிரச்சினை என்றால், விஜயன் சும்மா இருப்பாரா ? அவர் சொல்லியபடியே, மத்திய அரசின் சார்பாக, ஹாஜா மொய்தீன் கிஸ்தி, உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஆஜராகியுள்ளார். அந்த அடிப்படையில்தான், மத்திய அரசு இவருக்கு எழுதிய கடிதத்தை எடுத்து ராதாகிருஷ்ணனிடமே கொடுத்துள்ளார். 

இது மட்டுமல்ல.   கல்விக் கொள்ளையன் பச்சமுத்து புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடங்கி எப்படி தனக்கென்று ஒரு தனி செல்வாக்கை வளர்த்துக் கொண்டாரோ, அதே போல நாமும், ஒரு பத்திரிக்கை அதிபர் ஆகி விட்டால், அரசியல் செல்வாக்கு கிடைக்கும் என்று நினைத்து, ஏ.என்.ராதாகிருஷ்ணன் தொடங்கிய பத்திரிக்கைதான் "தின இதழ்".   இதை வைத்துக் கொண்டு, ஜெயலலிதா யாரையாவது பார்த்து "டாட்டா"  காட்டினால் கூட, அதை முதல் பக்கத்தில் "முதல்வர் கையசைத்தார்" என்று போட்டால், அரசு விளம்பரமும் கிடைக்கும்.   முதல்வரின் கடைக்கண் பார்வையும் கிடைக்கும்.  எதிர்த்து செய்தி போடும் ஊடகங்களின் மீதெல்லாம், அவதூறு வழக்கு போடும் ஜெயலலிதாவுக்கு, இது போன்ற பத்திரிக்கைகள் இனிக்கத்தானே செய்யும். 


இந்த விவகாரத்தில் ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறந்த நீதிபதிகளில் ஒருவரான ராமசுப்ரமணியத்திடம் வருகிறது.  அவருக்கு ஹாஜா மொய்தீன் கிஸ்தி யாரென்றும் தெரியும்.  ஏ.என்.ராதாகிருஷ்ணன் யாரென்றும் தெரியும்.  கர்ணன், தனபாலன், அருணா ஜெகதீசன், சி.டி.செல்வம் போல, அவ்வளவு எளிதாக, ராமசுப்ரமணியத்தை வளைத்து விட முடியாது என்பது ஏ.என்.ராதாகிருஷ்ணனுக்கும் நன்கு தெரியும். 

நீதியரசர் ராமசுப்ரமணியம்
இது போன்ற மருத்துவக் கல்லூரிகள் புற்றீசல் போல முளைத்து கிளை விடுவதற்கு காரணம், ஜெயலலிதா மற்றும் கருணாநிதிகள்தான்.   இவர்களே, இது போன்ற கல்விக் கொள்ளையர்களை தாலாட்டி, சீராட்டி வளர்க்கிறார்கள். இது போன்ற தரமற்ற கல்லூரிகளில் படித்து வெளி வரும் மருத்துவர்களிடம்தான், நாம் நமது பிள்ளைகளையும், பெற்றோர்களையும் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப் போகிறோம். 

பேய்கள் அரசாண்டால், சாத்திரங்கள் பிணம்தானே திண்ணும் ?